ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்..! 2026 மார்ச் 31 வரை நீட்டிக்க ஒப்புதல்..!

மத்திய அரசு ஏற்கெனவே பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டத்தின் கீழ் இலவசமாக உணவு தானியங்களை வழங்கி வருகிறது. பாரத் மைதா, பாரத் பருப்பு, தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை மலிவு விலையிலும், நியாயமான விலையிலும் விற்பனை செய்கிறது. இவை அனைத்தும் பொதுமக்களுக்குப் போதுமான உணவு கிடைப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் ஆகும்.
சுமார் 3 லட்சம் டன் பாரத் பருப்பு மற்றும் சுமார் 2.4 லட்சம் டன் பாரத் மைதா ஆகியவை ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு, மானிய விலையில் பருப்பு, கோதுமை மாவு கிடைப்பது அனைவருக்கும் உணவு, அனைவருக்கும் ஊட்டச்சத்து என்ற உத்தரவாதத்தை நிறைவேற்றுவதோடு, சாதாரண மக்களுக்கான உணவை உறுதி செய்துள்ளது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் விநியோகிக்கப்படும் அந்த்யோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் சர்க்கரைக்கு அளிக்கப்படும் மானியத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு அதாவது 2026 மார்ச் 31 வரை நீட்டிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் நாட்டிலுள்ள சுமார் 1.89 கோடி அந்தயோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைதாரர்கள் பயனடைவார்கள் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.