1. Home
  2. தமிழ்நாடு

கள்ளச்சாராய விவகாரத்திற்கும், விக்ரவாண்டி தேர்தலுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறது - ஆர்.எஸ்.பாரதி..!

1

கள்ளச்சாராய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கள்ளச்சாராயத்தால் 59 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், இந்த சாவுகளுக்கு பொறுப்பேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இலாகா அமைச்சர் முத்துச்சாமி ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

ஆனால், கள்ளச்சாராய மரணங்களுக்குப் பின்னால் அரசியல் சதி இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறுகையில், அண்ணாமலையின் சதித்திட்டம் தான் இது என்ற சந்தேகம் எங்களுக்கு உள்ளது என்று கூறியுள்ளார்.

இதுதொடர்பாக புதுக்கோட்டையில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “அண்ணாமலை ஏதாவது சொல்லிக் கொண்டு தான் இருப்பார். அவரின் பேச்சுக்கும், செய்கைக்கும் தொடர்பு இல்லை. விருப்ப ஓய்வில் சென்ற எஸ்.பி மோகன்ராஜ், கள்ளச்சாராய நிகழ்வு தெரிந்துதான் சென்றதாக கூறுகிறார் அண்ணாமலை. ஆனால் அதெல்லாம், பொய் நான் அப்படி போகவில்லை என்று அவர் அறிக்கை கொடுத்துள்ளார்.

அத்துடன் தனது மகள் மற்றும் மருமகளுக்கு பிரசவம் பார்ப்பதற்காக விடுப்பு எடுத்து அமெரிக்காவுக்கு சென்றேன் என்று கூறியுள்ளார். ஆனால், அண்ணாமலை போன்ற பொய் சொல்கிற மனிதனை வைத்துக்கொண்டு என்ன செய்வது? அவர் எந்த காலத்தில் உண்மையை பேசி உள்ளார்?

இந்த சாவுக்கு காரணம் யார் என்று ஆராய்ச்சிக்கு எல்லாம் நான் போக விரும்பவில்லை. ஆனால் அதே நேரத்தில் டார்ஜிலிங்கில் ரயில் விபத்து ஏற்பட்டு அவ்வளவு பேர் இறந்தார்கள். அப்போது மத்திய ரயில்வே அமைச்சர் ராஜினாமா செய்தாரா? நீட் தேர்வு கேள்வித் தாள்கள் எல்லாம் லீக்காகி உச்ச நீதிமன்றம் காரி துப்புகிறதே? பல பேர் இறந்துள்ளார்களே அங்கே மத்திய அமைச்சர் ராஜினாமா செய்தாரா?

நரேந்திர மோடி முதலமைச்சராக இருந்த போது 137 பேர் சாராயம் குடித்து இறந்தார்களே, அப்போது அவர் ராஜினாமா செய்தாரா? வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று பேசக்கூடாது.

அது மட்டுமல்ல இவ்விவகாரத்தில் ராஜினாமா செய்ய வேண்டும் என்று சொன்னால் புதுச்சேரியில் உள்ள முதலமைச்சர்தான் ராஜினாமா செய்ய வேண்டும். அங்கே இருந்து தான் சரக்கு வந்துள்ளது என்று காவல் துறை சொல்கிறது. விக்ரவாண்டி இடைத்தேர்தலுக்காக அண்ணாமலை போன்றவர்கள் செய்த சதியாக இருக்கலாம் என்று என்னை போன்றவர்களுக்கு சந்தேகம் இருக்கிறது.

விக்ரவாண்டி தேர்தலுக்கு முன்பாக இப்படி ஒரு சம்பவம் நடைபெறுகிறது என்றால் இதில் அரசியல் பின்புலம் இருக்கிறதா? யாரேனும் திட்டமிட்டு இந்த செயலை செய்தார்களா? இது சதியா என்பது விசாரணையில் தான் தெரியவரும்” என்றார்.

Trending News

Latest News

You May Like