1. Home
  2. தமிழ்நாடு

தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்.. கேரளா, கர்நாடகவுக்கு ரெட் அலர்ட்!

1

கடந்த மூன்று நாட்களாக கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதேபோல் தென்தமிழகத்திலும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி, நீலகிரி, கோவை உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

தென் தமிழகம் மட்டும் இன்றி டெல்டா பகுதிகள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட வடதமிழக பகுதிகளிலும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக மாலை மற்றும் இரவு நேரங்களில் கொட்டி தீர்க்கும் மழையால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்தில் இன்று மற்றும் நாளை மறுநாள் தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

12 சென்டிமீட்டர் முதல் 20 சென்டிமீட்டர் வரை மழை பொழிவுக்கு வாய்ப்பு இருப்பதால் தமிழகத்தில் இன்று ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை மையம் ரிவித்துள்ளது.

இதேபோல் கர்நாடகாவில் இரண்டு நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் இன்றும் நாளையும் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கையை விடுத்துள்ளது. 25, 26, 27 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதேபோல் கேரள மாநிலத்தில் இன்று அதி கன வெளுத்து வாங்கும் என்று தெரிவித்துள்ள இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. கோழிக்கோடு, வயநாடு மற்றும் கண்ணூர் மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், காசர்கோடு மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட்டும், திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், ஆலப்புழா மாவட்டங்களில் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதிக அலைகள் மற்றும் கடல் சீற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் இந்திய வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

Trending News

Latest News

You May Like