விராட் கோலி, ரோகித் சர்மாவுக்காக கொலை: அரியலூரில் அதிர்ச்சி சம்பவம்..!
அரியலூரில், இந்திய கிரிகெட் வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி குறித்து தவறாக பேசிய தனது நண்பனை இளைஞர் ஒருவர் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் விக்னேஷ். ஐடிஐ படித்துள்ள இவர் சென்னையில் பணியாற்றி வந்த நிலையில் வெளிநாட்டில் பிளம்பிங் வேலை செய்வதற்கான டெஸ்டு எடுத்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு விக்னேஷின் நண்பரான பிரபாகரன் போன் செய்து அழைத்துள்ளார். இதனையடுத்து விக்னேஷ் வீட்டைவிட்டு வெளியே சென்றுள்ளார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று, ஊருக்கு வெளியில் விக்னேஷ் தலையில் காயம்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கீழ்ப்பழுவூர் போலீசார் அங்கு சென்று, விக்னேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், பிரபாகரன், விக்னேஷ், இவர்களின் நண்பர்களான தர்மராஜ் ஆகிய மூவரும் சேர்ந்து மது அருந்தச் சென்றுள்ளனர். மது அருந்துவிட்டு வீடு திரும்பிய நிலையில், தர்மராஜ் மீண்டும் விக்னேஷை அழைத்துக்கொண்டு மது அருந்தச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் தர்மராஜை பிடித்து விசாரித்தனர். அப்போது, தர்மராஜ் தந்தை லோன் ஆப்பில் வாங்கிய கடனை கட்டுவதற்காக 2500 ரூபாய் கொடுத்துள்ளார். அந்த பணத்தை எடுத்துக்கொண்டு சென்ற தர்மராஜ் நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார். பிரபாகரன் வீட்டுக்கு சென்ற நிலையில் தர்மராஜ் மற்றும் விக்னேஷ் மது அருந்தியுள்ளனர். தர்மராஜ் கொஞ்சம் திக்கித் திக்கி பேசுவார்.
மதுபோதையில் இருந்த விக்னேஷ், "உன்னைப் போலத்தான் உன் ஆட்களும் இருக்கிறார்கள்" என்று, இந்திய கிரிக்கெட் வீரர்களான விராட் கோலி, ரோஹித் ஷர்மாவை திட்டியுள்ளார். இதன்காரணமாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த தர்மராஜ், நண்பன் என்றும் கூட பார்க்காமல் விக்னேஷை ஆத்திரத்தில் கொலை செய்ததாக கூறியுள்ளார்.