ரயில்களில் அலைமோதும் கூட்டம்... மத்திய அரசுக்கு வருவாய் அதிகரிப்பு!!
கொரோனா பெருந்தொற்று முற்றிலுமாய் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ரயில் பயணிகள் போக்குவரத்து துறை அசுர வளர்ச்சியை கண்டுள்ளது.
ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நவம்பர் 30 வரையிலான கால கட்டத்தில் ரயில் பயணிகள் எண்ணிக்கை 76 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த காலகட்டத்தில் பயணிகள் பிரிவில் ரயில்வேயின் வருமானம் ரூ.43 ஆயிரத்து 324 கோடி ஆகும். கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரயில்வே பயணிகள் பிரிவு வருமானம் ரூ.24 ஆயிரத்து 631 கோடிதான்.
முன்பதிவு செய்து பயணிக்கிற பயணிகள் பிரிவில் இந்த கால கட்டத்தில் 53 கோடியே 65 லட்சம் பேர் பயணித்துள்ளனர். கடந்த ஆண்டின் இதே கால கட்டத்தில் முன் பதிவு செய்து பயணித்த பயணிகள் எண்ணிக்கை 48 கோடியே 60 லட்சம் ஆகும்.
முன்பதிவு பயணிகள் பிரிவில் மேற்கூறிய 8 மாத வருமானம் ரூ.34 ஆயிரத்து 303 கோடி ஆகும். கடந்த ஆண்டு இதன் வருமானம் ரூ.22 ஆயிரத்து 904 கோடி ஆகும். இது 50 சதவீதம் அதிகமாகும். ஏப்ரல் முதல் நவம்பர் மாதம் வரை முன்பதிவில்லா பயணிகள் பிரிவில் மொத்தம் 352 கோடியே 73 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர். கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 138 கோடியே 13 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.
முன்பதிவில்லா பயணிகள் பிரிவில் கடந்த 8 மாத காலத்தில் வருமானம் ரூ.9 ஆயிரத்து 21 கோடியாகும். கடந்த ஆண்டு இது ரூ.1,728 கோடிதான். அந்த வகையில் இந்த வருமானம் 422 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 8 மாத காலத்தில் ரயில் பயணிகள் எண்ணிக்கையில் நல்ல வளர்ச்சி காணப்பட்டுள்ளதால் மத்திய அரசின் வருவாயும் அதிகரித்துள்ளது.
newstm.in