முதல்வர் திறந்து வைத்த ஆகாய நடைபாதையில் உள்ள சிறப்பம்சங்கள்..!!
சென்னை புறநகர் பகுதியில் இருந்து தி.நகரை சுற்றியுள்ள பகுதிகளுக்கு வேலைக்கு செல்பவர்கள், கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் அதிக அளவில் வந்து செல்வதால் எப்போதும் பரபரப்புக்கு பஞ்சமில்லாத பகுதியாக தி.நகர் விளங்குகிறது. சென்னையின் மிகப்பெரிய வர்த்தக நகரமாக விளங்கும் தியாகராய நகருக்கு வருபவர்கள் மாம்பலம் ரெயில் நிலையத்தில் இறங்கி தி.நகர் பஸ் நிலையத்திற்கு செல்வதற்கு கூட்ட நெரிசலைதான் கடந்து தான் செல்ல வேண்டும்.
இந்த நெரிசலை குறைப்பதற்காக தி.நகர் பஸ் நிலையத்தில் இருந்து மேட்லி சாலை, பார்டர் சாலை வழியாக மாம்பலம் ரெயில் நிலையம் வரை 13 அடி அகலத்தில் 1,968 அடி நீளம் கொண்ட நடை மேம்பாலம் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் ரூ.30 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.
லிப்ட் வசதி, நகரும் படிக்கட்டு வசதி கொண்ட இந்த ஆகாய நடை மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்த ஆகாய நடைமேம்பாலமானது பல்வகை போக்குவரத்தினை ஒருங்கிணைக்கும் வகையில், தென் தமிழகத்திலிருந்து வரும் இரயில் பயணிகள் மற்றும் மின்சார தொடர்வண்டியில் பயணிக்கும் பயணிகள் சிரமமின்றி தியாகராய நகர் பேருந்து நிலையத்தை அடையும் வண்ணம், மாம்பலம் இரயில் நிலைய நடைமேம்பாலத்துடன் நடைமேம்பாலம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இந்த ஆகாய நடைமேம்பாலத்தில் மின்னாக்கிகள் (Generators), காவல்துறை கண்காணிப்பு அறையுடன் இணைக்கப்பட்ட சிசிடிவி கேமராக்கள். பொதுமக்களுக்கான அறிவிப்பு ஒலிபெருக்கிகள், துருப்பிடிக்காத எஃகிலான குப்பை கூடைகள், பாதுகாவலர் அறைகள், நவீன கழிவறைகள் போன்ற கூடுதல் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது.
தியாகராய நகரில் ஆகாய நடைமேம்பாலத்தை திறந்து வைத்த முதலமைச்சர் , அந்நடைமேம்பாலம் முழுவதும் நடந்து சென்றார். பின்னர், நடைமேம்பாலத்திலிருந்து இறங்கி ரங்கநாதன் தெரு முழுவதும் நடந்து சென்று இருமருங்கிலும் கூடியிருந்த பொதுமக்களின் உற்சாக வரவேற்பினை ஏற்றுக் கொண்டு, அவர்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு, பொதுமக்களுடன் செல்பி புகைப்படங்களும் எடுத்துக் கொண்டார்.
.png)