போலீஸ் வேடத்தில் மாமூல் வசூல்... மடக்கிப்பிடித்த நிஜ போலீஸ்!!
உத்தரப்பிரதேச மாநிலம் பிரோசாபாத் பகுதியைச் சேர்ந்த முகேஷ் யாதவ் (23) என்பவர் 120 கிலோ உடல் எடை கொண்டவர். இவர் பிழைப்புக்காக விபரீத முடிவெடுத்து தற்போது கையும் களவுமாக சிக்கியுள்ளார்.
தனது தோற்றத்திற்கு ஏற்ப போலீஸ் உடை ஒன்றை தைத்து போட்டுக்கொண்டு, சுற்றுவட்டாரப் பகுதிகளில் களமிறங்கினார். தனக்கென போலி ஆதார் கார்டு, போலீஸ் ஐடி கார்டு போன்ற ஆவணங்களையும் தயாரித்துள்ளார்.
போலி போலீசாக ரோந்துக்கு சென்று வாகனங்களை மடக்கி பிடித்து அபராத தொகை, மாமூல்களை வாங்கியுள்ளார். அத்துடன் தனது பிழைப்புக்காக சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தாமல் பயணிக்க தனது போலீஸ் அடையாளத்தை பயன்படுத்தியுள்ளார்.
நீண்டநாள்களாக இவ்வாறு செய்து வந்த நிலையில், அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அவரை பின்தொடர்ந்து காவல்துறையினர் போலீஸ் உடையுடன் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
சுங்க கட்டணத்தை கட்டாமல் இருக்கவும், கடைகளில் மாமூல் வசூலிக்கவும் தான் போலீசாக நடித்தேன் என முகேஷ் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். அவரிடம் இருந்து போலி ஆவணங்களை பறிமுதல் செய்த காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.
newstm.in