போதையில் மனைவியின் தம்பியை கொன்ற கணவன்!!
கோவையில் குடிபோதையில் மனைவியின் தம்பியை கொலை செய்த கணவனை காவல்துறையினர் கைது செய்தனர்.
இடையார்பாளையம் அடுத்த கோவில்மேடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் (33) என்பவருக்கு தங்கமாரி, செல்வி என 2 சகோதரிகள் உள்ளனர். மணிகண்டன் தனது தாயாருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் குடும்பத்தகராறு காரணமாக தங்கமாரியை அவரது கணவர் ஐயப்பன் அடித்துள்ளார்.
இதனை அறிந்த மணிகண்டன் போதையில் தங்கமாரி வீட்டிற்கு சென்று ஐயப்பனை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனையடுத்து தங்கமாரி தனது மற்றொரு சகோதரி செல்வியின் கணவர் பாலசுப்ரமணியத்திற்கு தகவல் கொடுத்தார்.
ஆனால் அவர் நேரில் சென்று மணிகண்டனிடம் கேட்க மறுக்கவே, அவரது மனைவி செல்வி, பயந்து விட்டாயா என்று கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பாலசுப்பிரமணியம் மறுநாள் மது போதையில் மணிகண்டன் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார்.
அப்போது இரும்பு கம்பியால் மணிகண்டனை குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்று தலைமறைவானார். அதன்பிறகு தனது மனைவிக்கு போன் செய்து, உன் தம்பி இருக்கிறானா இல்லை செத்துவிட்டானா போய் பார்’ என்று பேசி போனை துண்டித்து விட்டார்.
தகவல் அறிந்த பெரியநாயக்கன்பாளையம் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து கணுவாய் பகுதியில் பதுங்கியிருந்த பாலசுப்ரமணியத்தை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in