பழநி முருகன் கோயிலில் தமிழில் குடமுழுக்கு.. அமைச்சர் சேகர் பாபு தகவல்..!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழநி பாலதண்டாயுதபாணி கோயில் குடமுழுக்கு விழா ஜன.27-ம் தேதி நடைபெற உள்ளது. குடமுழுக்கை சமஸ்கிருதத்திற்கு இணையாக தமிழில் நடத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் தமிழக அரசை வலியுறுத்தி வந்தனர்.
இதுதொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடர்ந்த வழக்கில், குடமுழுக்கு தமிழில் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்தது. தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என நீதிபதிகள் நேற்று உத்தரவிட்டனர்.
இந்நிலையில், பழநி முருகன் கோயில் குடமுழுக்கு முன்னேற்பாடு பணிகள் மற்றும் பெரும் பொருட்செலவில் நடந்து வரும் பல்வேறு சீரமைப்பு பணிகளை தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு இன்று ஆய்வு செய்தார்.
அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இங்கு நடைபெற்று வரும் 88 திருப்பணிகளில், 26 பணிகள் கோயில் நிதி மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மீதமுள்ள பணிகள் ஆன்மிக பணி நன்கொடையாளர்கள் மூலம் நடந்து வருகின்றன. பழநி கோயில் குடமுழுக்கு ஆகம விதிகளுக்குட்பட்டு, தமிழில் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.