பக்தர்களுக்கு நற்செய்தி.. திருத்தணி கோவிலில் ஆன்லைன் டிக்கெட் சேவை..!
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆன்லைன் டிக்கெட் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தமிழகம் உட்பட அண்டை மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்துச் செல்வது வழக்கம்.
இங்கு கடந்த 2014-ம் ஆண்டு முதல் பக்தர்கள் வசதிக்காக மூலவருக்கு நடத்தப்படும் சிறப்பு அபிஷேகம், வெள்ளித்தேர், கேடய உற்சவம் உட்பட பல்வேறு சேவைகளுக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஆன்லைன் டிக்கெட் சேவை நிறுத்தி வைக்கப்பட்டது.
தற்போது, கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து, ஆன்லைன் டிக்கெட் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. இதையடுத்து, பக்தர்கள் www.tiruttanimurugan.hrce.tn.gov.in என்ற இணையதளம் மூலம் அபிஷேகம் மற்றும் சேவா டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.