1. Home
  2. தமிழ்நாடு

நான் தமிழச்சி தான்..! கர்நாடகாவில் ஓங்கி குரல் கொடுத்த ஜெயலலிதா..!

1

‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் படப்பிடிப்பு கர்நாடக கர்வார் பகுதியில் ஒரு சிறு தீவில் நடந்து கொண்டிருந்தது. அந்தப் பகுதியில் வசதியான அறைகள் எதுவும் இல்லாததால், படப்பிடிப்புக் குழு முழுவதும் மூன்று மணி நேரம் தொலைவில் உள்ள கோவாவில் தங்கி இருந்தது. ஏதேச்சையாகப் படப்பிடிப்புக் குழு ஜெயலலிதாவை மறந்து கோவாவில் தனியாக விட்டுச் சென்று விட்டனர். அவருக்கு அப்போது 17 வயது. அந்தளவிற்கு அதிக பிரபலமான  நடிகையும் இல்லை. அதுவும் கோவாவில் அவரை யாருக்கும் தெரியாது. ஆனால், அவர் கொஞ்சமும் அஞ்சவில்லை. தைரியமாகச் சூழ்நிலையைக் கையாண்டார். 


தனியாக கர்நாடகா சென்று, அங்கு ஒரு கட்டுமரக்காரர் துணையுடன் படப்பிடிப்பு நடந்த அந்தச் சிறு தீவு பகுதியை அடைந்தார். அப்போது மட்டுமல்ல எபோதுமே ஜெயலலிதா தைரியசாலி தான். அதற்கு மற்றொரு உதாரணமாக இன்னொரு சம்பவம் நிகழ்ந்தது. 


திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய காலகட்டத்தில், வார இதழ் ஒன்றுக்கு, “என் பூர்வீகம் தமிழகம். நான் தமிழச்சி...!” என பேட்டி தந்தார். அதற்கு முன்பு வரையில், கர்நாடகாவில் பலரும், அவரைக் கன்னடப் பெண் என்று தான் நினைத்திருந்தார்கள்.

                                                                          
ஆனால், இவர் அளித்த இந்த பேட்டி அவர்களுக்கு ஆச்சர்யத்தைக் கொடுத்தது. கன்னடவெறியர்களுக்கு இது அசெளகர்யத்தைக் கொடுத்தது. அதே நேரத்தில், ஒரு படப்பிடிப்பில் கலந்துக் கொள்வதற்காக கர்நாடகாவில் சாமுண்டி ஸ்டூடியோ சென்றார். இந்தத் தகவல் அறிந்து 100-க்கும் மேற்பட்ட கன்னட வெறியர்கள், அந்த ஸ்டூடியோவை முற்றுகையிட்டனர். ‘‘ஜெயலலிதா மன்னிப்புக் கேட்டால் தான், இந்த இடத்திலிருந்துச் செல்வோம்’’ என முறுக்கிக் கொண்டு நின்றனர். படப்பிடிப்புக் குழுவினர் அவர்களுடன் எவ்வளவோ பேசிப் பார்த்தும் பயனில்லை. அவர்கள் கலைவதாக இல்லை. ஆனால், ஜெயலலிதா கொஞ்சமும் அஞ்சாமல், அந்தக் கூட்டத்தைப் பார்த்து, “நான் ஏன் மன்னிப்புக் கேட்க வேண்டும்?. நான் என்ன தவறாகச் சொல்லிவிட்டேன். நான் தமிழச்சி தான்!” என்று தைரியமாக அவர்களின் முன்னால் வந்து நின்றார். 


இந்த அசாத்திய தைரியம் தான் ஜெயலலிதா. அனைவராலும் கைவிடப்பட்டு, எம்.ஜி.ஆர் இறுதி ஊர்வல வாகனத்திலிருந்து கீழே தள்ளிவிடப்பட்டபோதும், அரசியல் வாழ்க்கையில் தனித்துவிடப்பட்டபோதும், இந்தத் தைரியம்தான் தனியாளாக ஜெயலலிதாவை அசைக்க முடியாக அரசியல் சக்தியாக உருவெடுக்க வைத்தது.

Trending News

Latest News

You May Like