நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் திருப்பூர் சார் கலெக்டராக நியமனம்..!!
1984-ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'கை கொடுக்கும் கை' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நடிகர் சின்னி ஜெயந்த். இவர் 300-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில், 30 வருடங்களுக்கு மேல் இவர் திரைத்துறையில் நடித்து வருகின்றார்.
நடிகர் மட்டுமல்லாது தயாரிப்பாளர், இயக்குநர், மிமிக்ரி கலைஞர் என பன்முகம் கொண்ட இவர், பல திரைப்படங்களில் குணச்சித்திர கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இவர் பல்வேறு தொலைகாட்சி நிகழ்சிகளிலும் நாடகங்களிலும் பணியாற்றி உள்ளார். பல குரல் ஆராய்ச்சி செய்து வருவதற்காக இவருக்கு சர்வதேச திறந்தவெளி மாற்று மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கெளரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.
இந்த நிலையில் இவரது மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த சிவில் சர்வீஸ் தேர்வில், 75வது இடத்தை பிடித்து தேர்ச்சி பெற்றார். இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முசோரியில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி மேலாண்மை பயிற்சி மையத்தில் பயிற்சி வழிப்பட்டு பின்னர் வெளிமாநிலங்களில் களப்பணி பயிற்சி பெற்று வந்தனர்.
பணி நிறைவடைந்த பிறகு 12 பேர் ஐஏஎஸ் அதிகாரிகளாக தமிழ்நாடு அரசு பணிக்கு திரும்பிய நிலையில், மத்திய அரசு பணியில் இருந்த ஸ்ருதன் ஜெய் நாராயணன் முதன் முறையாக தூத்துக்குடி பயிற்சி துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் தற்போது சுருதன் ஜெய் நாராயணன் திருப்பூர் மாவட்ட சார் ஆட்சியராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதை அடுத்து நடிகர் சின்னத்துக்கும் அவரது மகனுக்கும் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனை தனது சமூக வலைதளப் பக்கத்த்தில் நடிகர் சின்னி ஜெயந்த் பகிர்ந்துள்ள நிலையில், லைக்ஸ்களும் குவிந்து வருகிறது.