திரைப்பட பாணியில் மருத்துவமனைக்குள் புகுந்து கொலை!!
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே தொட்டில்பட்டியைச் சேர்ந்த பிரபல ரவுடியான ரகு என்கிற ரகுநாதன் (22) பெயிண்டராக பணியாற்றி வந்தார். ரகுநாதனும் அதே பகுதியை சேர்ந்த சென்ட்ரிங் வேலை செய்யும் வெள்ளையன் என்கிற மாரிகவுண்டனும் நண்பர்கள். இருவரும் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 2019ஆம் ஆண்டு ரகுநாதன் தொட்டில்பட்டியில் உள்ள வேறு ஒரு குழுவில் சேர்ந்து கொண்டதாக தெரிகிறது. இது தொடர்பாக வெள்ளையனுக்கும் ரகுநாதனுக்கும் முன்விரோதம் ஏற்பட்டது. இந்த நிலையில் ரகுநாதனின் வீட்டுக்கு சென்ற வெள்ளையன் வேறு குழுவில் இணைந்ததற்காக தாக்குதல் நடத்தியுள்ளார்.
அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தகராறில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கும்பலை அங்கிருந்து விரட்டியடித்தனர். வெள்ளையன் கும்பல் மீது போலீசில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக ரகுநாதன் மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற சென்றதாக தெரிகிறது.
இதை அறிந்த வெள்ளையன், தனது நண்பர்களுடன் மருத்துவமனைக்கு சென்று ரகுநாதனை கொலை செய்தார். தகவல் அறிந்து வந்த போலீஸார் வெள்ளையன், மூர்த்தி, பிரகாஷ் ஆகியோரை கைது செய்தனர். இந்த கொலையில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in