தமிழ்நாடா, தமிழகமா..?: அண்ணாமலையை போட்டிக்கு அழைக்கும் காயத்ரி ரகுராம்..!
பாஜகவின் அண்டை மாநிலத் தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநிலத் தலைவராக காயத்ரி ரகுராம் செயல்பட்டு வந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் அந்த பொறுப்பிலிருந்து அவரை 6 மாதங்களுக்கு நீக்கப்படுவதாகத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.
கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் தொடர்ச்சியாக செயல்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அண்ணாமலை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து பாஜகவிலிருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் கூறினார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “நான் என்ன தவறு செய்தேன் என என்னை அழைத்துச் சொல்லுங்கள். இடைநீக்கம் குறித்த கடிதத்தில் கட்சிக்குக் களங்கம் உண்டாக்கினேன் எனக் கூறியிருந்தனர். என்ன செய்தேன் என சொன்னால்தானே தெரியும்?. இதனால்தான் உங்களை இடைநீக்கம் செய்தேன் என ஆதாரத்துடன் காட்டினால் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அண்ணாமலை ஆதாரங்கள் இல்லாமல்தான் எப்போதும் பேசுவார். அதுதான் உண்மை” எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், அண்ணாமலையை எதிர்த்து ஈரோடு இடைத் தேர்தலில் போட்டியிட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு நேரடியாக காயத்ரி ரகுராம் சவால் விடுத்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், “ஈரோடு இடைத் தேர்தலில் அண்ணாமலை போட்டியிட சவால் விடுகிறேன். நான் உங்களை எதிர்த்து நிற்பேன் சவால் விடுகிறேன்.
உங்கள் நாடகம் மற்றும் போலி விளம்பரங்கள் டெல்லியில் வெளிவரட்டும். சவாலை ஏற்றுக்கொள்வீர்களா?. நான் தோற்றால் 5 நிமிடத்தில் நீங்கள் முதல்வராகி ஆட்சியை மாற்றலாம். நான் தமிழ்நாட்டின் மகள், நீ தமிழகத்தின் மகன். தமிழகமா அல்லது தமிழ்நாடா என்று பார்ப்போம்” எனக் கூறியுள்ளார்.
.png)