சர்ச்சைக்குரிய கருத்து: பிரபல நடிகர் மீது செருப்பு வீச்சு..!
அதிர்ஷ்ட தேவதை குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த நடிகர் தர்ஷன் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் தர்ஷன். இவர், சில தினங்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது, அதிர்ஷ்ட தேவதை குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி இருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்தன.
இந்த நிலையில், தர்ஷன் நடித்துள்ள 'கிராந்தி' என்ற திரைப்படம் வரும் ஜனவரி மாதம் 26-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா விஜயநகர் மாவட்டம் ஒசப்பேட்டேயில் நடந்தது. இதில் தர்ஷனின் ரசிகர்கள் கலந்து கொண்டனர். இதன்போது, ரசிகர்கள் கூட்டத்தில் இருந்த இளைஞர் ஒருவர் தனது செருப்பை கழற்றி தர்ஷன் வீசினார். அந்த செருப்பு தர்ஷனின் தோள் பட்டையில் பட்டு கீழே விழுந்தது.
அதிர்ஷ்ட தேவதை குறித்து தர்ஷன் சர்ச்சை கருத்துகளை தெரிவித்ததால், மறைந்த நடிகர் ஒருவரின் ரசிகர் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த சம்பவத்திற்கு நடிகர் சிவராஜ்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு, "தர்ஷன் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் எனது மனதிற்கு வேதனை அளிக்கிறது. நடிகர்கள் யாரையும் ரசிகர்கள், அவமரியாதை செய்யக்கூடாது. இத்தகைய செயல்களில் இருந்து ரசிகர்கள் விலகி இருக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து நடிகை ரம்யா தனது ட்விட்டர் பக்கத்தில், "நடிகர்களின் ரசிகர் மன்றங்கள் ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். நடிகர்கள் தங்களது ரசிகர்களிடம் மற்ற நடிகர்கள் பற்றி சமூக வலைத்தளங்களில் 'ட்ரோல்' செய்ய வேண்டாம் என்று கூற வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளை இழிவுபடுத்தும் கருத்துகளை சமூக வலைத்தளங்களில் யாரும் பதிவிடாதீர்கள். எல்லா துஷ்பிரயோகங்களும், கேவலமான வார்த்தைகளும் பெண்களை குறிவைத்து பேசப்படுகின்றன. இத்தகையை சமூக வலைதள கணக்குகளை தடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.