குவைத்தில் தமிழ் பெண்ணுக்கு நேர்ந்துள்ள கொடுமை!!
குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்ற தமிழ் பெண் ஒருவர், தன்னை கழிவறையில் தங்கவைத்து 20 மணி நேரம் வேலை வாங்குவதாக கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சென்னை தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த புவனா(37) - ஜேம்ஸ் பால் தம்பதிக்கு கொரோனா காலத்தில் ரூ. 4 லட்சம் வரை கடன் ஏற்பட்ட நிலையில் கடன் கொடுத்தவர்கள் பலரும் இவர்களை தொந்தரவு செய்துள்ளனர்.
இந்நிலையில் ஜான்சன் என்பவர், குவைத் நாட்டில் குழந்தையை பராமரிக்கும் வேலை இருப்பதாகவும் வேலைக்கு சேர மருத்துவ பரிசோதனைக்கான பணத்தை செலுத்தினால் மட்டும் போதும் என புவனாவிடம் கூறியுள்ளார்.
அதன் படி புவனாவும் குழந்தை பராமரிப்பு வேலை என நம்பி கடந்த பிப்ரவரி மாதம் குவைத் சென்றுள்ளார். ஆனால் அங்கு சென்ற ஒரு சில நாட்களிலேயே தன் கணவர் மற்றும் மகளுக்கு வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில் ஒரு பெரிய குடும்பத்திற்கே தாம் வேலை செய்வதாகவும் அங்கு 20 மணி நேரம் தம்மை வேலை வாங்குவதாகவும் அடித்து அவமானப்படுத்தி கழிவறையில் படுக்க வைப்பதாகவும் கூறியுள்ளார்.
மூக்கில் இரத்தம் வரும் அளவிற்கு வேலை வாங்கி கொடுமை படுத்துவதாகவும் சாப்பிட உணவு கூட சரியாக தராமல் அடிப்பதாகவும் கதறி அழுதுள்ளார். இது தொடர்பாக அவரது கணவர் ஜேம்ஸ் பால், தனியார் தொண்டு நிறுவனத்தின் உதவியை நாடியுள்ளார்.
AIMS என்ற தொண்டு நிறுவனத்தின் CEO கணியா பாபு மூலம் தூதரகத்தை தொடர்புகொண்டனர். அப்போது தூதரக அதிகாரிகள், எப்படியாவது புவானா தப்பி வந்து தூதரகத்தை சேர்ந்தால் மற்றதை தாங்கள் பார்த்து கொள்வதாக கூறியுள்ளனர்.
இது குறித்து புவனாவிடம் கூறியதற்கு, தற்போது தான் தங்கி வேலை செய்துவரும் வீடு அந்நாட்டின் காவல் அதிகாரி ஒருவரின் வீடு எனவும் அங்கிருந்து அவர் தப்பித்தால் தன் மீது திருட்டு பழி சுமத்தி திருட்டு வழக்கு போடுவார்கள் எனவும் புவனா கூறியுள்ளார்.
இந்நிலையில் இது குறித்து பேசிய அவரது மகள், தன் தாயை எப்படியாவது தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலையிட்டு காப்பாற்ற வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
newstm.in