இந்த மாதத்துடன் விருப்ப ஓய்வு பெறுகிறாரா இறையன்பு?
தி.மு.க. ஆட்சிக்கு வந்த 2021-ம் ஆண்டு மே மாதம் முதல் தமிழக அரசின் தலைமை செயலாளராக பதவி வகித்து வருபவர் இறையன்பு. மிகவும் நேர்மையானவர், எளிமையானவர், எழுத்தாளர், பேச்சாளர் என அனைவராலும் பாராட்டப்படக்கூடியவர்.
இவருக்கு வருகிற ஜூன் மாதம் வரை பதவிக்காலம் உள்ளது. ஆனாலும் இந்த மாதம் 28-ந்தேதியுடன் அவர் தலைமை செயலாளர் பதவியில் இருந்து விருப்ப ஓய்வுபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
மார்ச் 1-ந்தேதியில் இருந்து இறையன்புக்கு செயலாளர் பதவிக்கு நிகரான அதிகாரம் கொண்ட பதவியான தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையர் பதவி வழங்கப்படும் என்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கவர்னரால் நியமிக்கப்படும் இந்த பதவி 3 ஆண்டுகள் ஆகும்.
இறையன்பு தலைமை செயலாளர் பதவியில் இருந்து மாற்றப்பட்டால் புதிய தலைமை செயலாளராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான சிவ்தாஸ் மீனா ஹன்ஸ்ராஜ் வர்மா, எஸ்.கே.பிரபாகர் அல்லது முருகானந்தம் ஆகியோரில் ஒருவர் தலைமை செயலாளராக அதிக வாய்ப்பு உள்ளது என கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.