அசைவ உணவு டெலிவரியை முடக்கியதற்கான காரணத்தை கூறிய ஸ்விக்கி சொமேட்டோ..!
ராமர் கோவில் திறப்பு விழாவை ஒட்டி உத்தர பிரதேசம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்களில் அசைவ உணவு சாப்பிட கூடாது என அரசே உத்தரவு பிறப்பித்து இருந்தது. அதேபோல் “X” சமூக வலைத்தளத்திலும் பெரும்பாலானோர் அசைவ பொருட்களை புறக்கணிப்பதில் ஆர்வம் காட்டி வந்தனர்.
இதனை கருத்தில் கொண்டு நேற்று (ஜன.22) ஒரு நாள் மட்டும் உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், அசாம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய வட மாநிலங்களில் அசைவ உணவு விநியோகத்தை சொமேட்டோ ஃபுட் டெலிவரி நிறுவனம் முடக்கி இருந்தது.
இது குறித்து வாடிக்கையாளர்கள் பதிவு செய்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்துள்ள ஜொமேட்டோ நிறுவனம் அரசின் உத்தரவு காரணமாகவே வட மாநிலங்களை சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு அசைவ உணவு டெலிவரி செய்ய விடவில்லை என விளக்கம் அளித்துள்ளது.
முன்னதாக இன்னொரு ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கியும் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. அதில், ‛‛உத்தர பிரதேசத்தில் ஜனவரி 22ம் தேதி இறைச்சி விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் உங்களின் அசைவ உணவு ஆர்டர்கள் நிறுத்தப்படுவதோது, இந்த ஆர்டர்கள் நாளை முதல் ஏற்றுக்கொள்ளப்படும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.