நாட்டுக்காக திரண்ட இளைஞர்கள்..! இந்திய ராணுவ வீரர்களுக்கு உதவ முன்வந்த இளைஞர் படை..!

பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22 ஆம் தேதி சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாகுதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆப்ரேஷன் சிந்தூர் திட்டத்தின் மூலம் இந்திய முப்படைகள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத அமைப்பு முகாம்களின் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.
இதனை தொடர்ந்து 2 தினங்களாக பாகிஸ்தான் தன்னுடைய எல்லைகளை மீறி, காஷ்மீர், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் மாநில எல்லைப் பகுதிகளில் திடீர் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது. இதனால் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அவசரகால தயார்நிலையை ஆதரிக்க சண்டிகர் மாநில அரசு நாட்டின் இளைஞர்களை ராணுவத்தில் தன்னார்வலர்களாக சேர அழைப்பு விடுத்துள்ளது.
இது குறித்து சண்டிகர் துணை ஆணையர் (டிசி) மற்றும் மாவட்ட மாஜிஸ்திரேட் (டிஎம்) நிஷாந்த் குமார் யாதவ் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ராணுவத்தில் சிவில் பாதுகாப்பு சேர்க்கை மற்றும் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. தன்னார்வலராக பணியாற்ற 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கபட்டுள்ளது. இந்த பயிற்சியில் தன்னார்வலராக சேரும் இளைஞர்களுக்கு முதலுதவி மற்றும் தீயணைப்பு போன்ற அத்தியாவசிய அவசரகால பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
மேலும் விருப்பம் உள்ளவர்கள் சண்டிகரில் உள்ள தாகூர் தியேட்டருக்கு வரலாம் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் ராணுவத்தில் தன்னார்வலராக சேர ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சாலையில் திரண்டுள்ளனர். இதற்கான பயிற்சி முகாம் இன்று இரவு 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.முன்னதாக டெல்லியின் சிரி ஃபோர்ட் ஆடிட்டோரியத்தில் பயிற்சி முகாம் நடைபெற்றது.அப்போது 1,700 ராணுவ தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.