6 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து பணம், நகை சுருட்டிய இளைஞர்!!
6 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து பணம், நகை சுருட்டிய இளைஞர்!!

நெல்லையில் ஆறு இளம்பெண்களை திருமணம் செய்து ஏமாற்றி நகைகளை சுருட்டிய நபரை போலீஸார் கைது செய்தனர்.
நெல்லை என்.ஜீ.ஓ பி காலனியை சேர்ந்த விஜிலாராணி என்பவருக்கும், தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் பகுதியைச் சேர்ந்த வின்சென்ட் பாஸ்கர் என்பவருக்கும் கடந்த ஆண்டு ஜூலை 15ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது பெண்வீட்டார் சார்பில் 40 பவுன் தங்க நகையும், 3 லட்சம் ரூபாய் ரொக்கமும் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் திருமணம் முடிந்த சில மாதங்களில் வின்சென்ட் பாஸ்கர் நகையை விற்று மோசடி செய்துள்ளார். இதுகுறித்து கேட்ட மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து விஜிலாராணி தனது தந்தையிடம் விவரத்தை கூறியுள்ளார்.
உடனடியாக தந்தை கணேசன் பாளையங்கோட்டையில் உள்ள அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார் . இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திய போது வின்சென்ட் பாஸ்கர் ஏற்கனவே 5 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்திருப்பதும், விஜிலாவை 6ஆவதாக திருமணம் செய்தது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து தனிப்படை அமைக்கப்பட்டு வின்சென்ட் பாஸ்கரை தேடிவந்த போலீசார் திசையன்விளை அருகில் உள்ள சுவேசபுரத்தில் வைத்து அவரை கைது செய்தனர். விசாரணையில் சுவிசேசபுரம் பகுதியைச் சேர்ந்த பிளாரன்ஸ் என்ற பெண் தாயாகவும் , தாமரைச் செல்வி என்ற பெண் சித்தியாகவும் நடித்து திருமணம் செய்து கொண்டதை ஒப்புக் கொண்டார்.
இதனையடுத்து வின்சென்ட்பாஸ்கர் , மற்றும் பிளாரன்ஸ், தாமரைச்செல்வி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர் . மேலும் தலைமறைவாக உள்ள திருமண தரகர் இன்பராஜை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
newstm.in