இன்று புறநகர் ரயிலில் இலவசமாக பயணம் செய்யலாம்..! மெட்ரோ பேருந்து பயணமும் இலவசம்..!

இன்று ஜனவரி 25ம் தேதி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியை பார்வையிட வரும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு சிறப்பு பயண ஏற்பாட்டை தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் அறிவித்துள்ளது.
தடையற்ற பயணத்தை உறுதி செய்யவும், பார்வையாளர்களுக்கு அனுபவத்தை மேம்படுத்தவும், தெற்கு ரயில்வே, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துடன் (TNCA) இணைந்து, இந்த போட்டியை காண்பதற்கான டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு புறநகர் ரயில்களில் இலவச பயணத்தை வழங்குகிறது.
இலவச பயண வசதியின் முக்கிய விவரங்கள்:
- தகுதி: இந்தியா-இங்கிலாந்து டி20 கிரிக்கெட் போட்டிக்கான செல்லுபடியாகும் டிக்கெட்டுகளை பார்வையாளர்கள் வைத்திருக்க வேண்டும்.
- பயண வகுப்பு: சென்னை கோட்டம் முழுவதும் உள்ள இரண்டாம் வகுப்பு EMU ரயில்களுக்கு மட்டும் இலவசப் பயணம் பொருந்தும்.
- செல்லுபடியாகும் காலம்: ஜனவரி 25 அன்று (நாளை) போட்டி நடைபெறும் முன்பும் மற்றும் போட்டி முடிந்த பின்னர் மீண்டும் திரும்பும் வகையிலும் இந்த பயண வசதி கிடைக்கும்.
- பார்வையாளர்கள் தங்கள் பயணத்தின் போது தங்களது அசல் கிரிக்கெட் போட்டி டிக்கெட்டுகளை எடுத்துச் செல்ல வேண்டும்.
- டிக்கெட் சரிபார்க்கும் ஊழியர்களின் கோரிக்கையின் பேரில் டிக்கெட்டை காண்பிப்பது அவசியம்.
போட்டி முடிந்த பிறகு பார்வையாளர்கள் எளிதாக செல்லும் வகையில் சேப்பாக்கம் MRTS நிலையத்தில் இருந்து கூடுதல் மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ, பேருந்து பயணமும் இலவசம்
சென்னை மாநகர பேருந்துகளிலும் கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் போட்டி நடைபெறும் நேரத்திற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பும், போட்டி முடிந்த மூன்று மணி நேரத்திற்கு பின்னர் கட்டணமின்றி பயணிக்கலாம் என மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
அதேபோல இந்த கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச் சீட்டை பயன்படுத்தி எந்த மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்தும் அரசினர் தோட்டம் வரை இலவசமாக மெட்ரோவில் பயணிக்கலாம் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.