காதலனை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம்...பெங்களூருவில் ஒட்டப்பட்ட போஸ்டர் வைரல்..!

சீனா, ஜப்பான் மற்றும் தாய்லாந்தில் காதலன் மற்றும் காதலியை வாடகைக்கு எடுத்துக் கொள்ளும் கலாசாரம் அதிகரித்து வருகிறது. பொது நிகழ்ச்சிகள், விருந்துகள் மற்றும் தனிமையைபோக்குவதற்கு என இதற்கு காரணம் சொல்லப்பட்டது. சமீப நாட்களாக இந்தியாவிலும் இதுபோன்ற கலாசாரம் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில், காதலர் தினத்தை முன்னிட்டு பெங்களூருவில் பல இடங்களில் ஒட்டப்பட்ட போஸ்டர் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலானது. அதில், ஒரு நாளைக்கு ரூ.389 என்ற கட்டணத்தில் காதலனை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் எனக்கூறப்பட்டு இருந்தது.பெங்களூருவின் ஜெயாநகர் பானா ஷங்கரி மற்றும் பிடிஏ காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது.
இதனை புகைப்படம் எடுத்த அப்பகுதிவாசிகள், அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டதுடன், நகரின் கலாசாரத்திற்கு மிரட்டல் விடுக்கும் வகையில் இந்த போஸ்டரை ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கருத்து பதிவிட்டு வருகின்றனர்.