வெறும் 50 ரூபாயில் உங்க செல்ல பிராணிகளுக்கு ஆன்லைனிலேயே லைசென்ஸ் பெறலாம்..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/3e4607b3a4d9a898ddc0d01df38ebabe.png?width=836&height=470&resizemode=4)
சென்னையில் நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளை வளர்க்கும் உரிமையாளர்கள் இணைய வழி மூலம் அதற்கான உரிமம் பெறுவதற்கான திட்டத்தை கடந்த ஆண்டு ஜூன் மாதம் பெருநகர சென்னை மாநகராட்சி அறிமுகம் செய்தது.
இணைய வழியில் செல்லப்பிராணிகள் உரிமம் பெறுவது எப்படி?
சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில் உள்ள பெட் அனிமல் லைசென்ஸ் (Pet Animal License) என்ற பகுதியை தேர்வு செய்து, செல்லப்பிராணிகளை வளர்ப்போர் தங்களது தொலைபேசி எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
புதிய செல்லப்பிராணிகளின் உரிமம் (New Pet Registration) என்பதை தேர்வு செய்யவும், செல்லப்பிராணிகளின் அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து உரிமையாளர் புகைப்படம், முகவரி சான்றின் புகைப்படம், செல்லப்பிராணியின் புகைப்படம், ஒரு வருடத்திற்குள்ளாக வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி (ARV) செலுத்தியதற்கான சான்றின் புகைப்படம் ஆகியவற்றை பதிவேற்றம் செய்து உறுதி மொழி (Declaration) அளித்த பின்னர் சமர்ப்பிக்க (Submit) வேண்டும்.
இந்த விவரங்களை மண்டல கால்நடை உதவி மருத்துவர்கள் சரிபார்த்த பிறகு செல்லப்பிராணிகளுக்கான உரிமம் உறுதிப்படுத்தப்படுகின்றது.உரிமம் தொடர்பான விவரங்கள் குறுஞ்செய்தி மூலம் செல்லப்பிராணி உரிமையாளர்களுக்கு தெரிவிக்கப்படும்.
50 ரூபாய் கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தி, செல்லப்பிராணி வளர்ப்பதற்கான உரிமத்தை இணைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
சென்னை மாநகராட்சி சார்பில் வழங்கப்படும் இந்த உரிமம் ஓராண்டுக்கு மட்டுமே செல்லுபடியாகும். ஒவ்வொரு ஆண்டும் இந்த உரிமத்தை செல்லப்பிராணிகளை வளர்ப்போர் புதுப்பித்து கொள்ள வேண்டும்.
உரிமம் பெற்றுள்ள செல்லப்பிராணிகள் சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் செயல்படும் சிகிச்சை மையங்களில் வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட்டு வருகிறது.