1. Home
  2. தமிழ்நாடு

எல்லாத்தையும் மாற்றுகிறீர்களே... உங்கள் பெயரை தமிழில் மாற்ற தயாரா முதல்வர் அவர்களே - தமிழிசை..!

1

இன்று 2025-2026 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்நிலையில் தமிழ்நாடு அரசின் மாநில திட்டக்குழு சார்பில் தயாரிக்கப்பட்ட 2024-25 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கையை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்டார். தமிழ்நாடு அரசு, பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிடுவது இதுவே முதல்முறையாகும்.

மேலும், தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை இலச்சினையில் கடந்த ஆண்டுகளில் ரூபாய் குறியீடு(₹) இடம்பெற்றிருந்த நிலையில் இந்த ஆண்டு அதற்குப் பதிலாக ‘ரூ’ என்ற எழுத்து இடம் பெற்றுள்ளது. தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக இலச்சினையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தமிழர் வடிவமைத்த ரூபாய் குறியீட்டை திமுக அரசு மாற்றியுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‘திமுக அரசின் 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் இலச்சினையில், ரூபாய் அடையாளக் குறியீடு மாற்றப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த உதய் குமார் என்பவரால் வடிவமைக்கப்பட்ட ரூபாய் குறியீடு, இந்தியாவால் ஏற்றுக்கொள்ளப்பட்டு நமது ரூபாய்த் தாள்களில் இணைக்கப்பட்டுள்ளது. உதய் குமார், முன்னாள் திமுக எம்எல்ஏவின் மகன். முதல்வரே, நீங்கள் எப்படி இவ்வளவு முட்டாளாக முடியும்?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பாஜக மூத்த தலைவரும் தெலங்கானா முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது பெயரை தமிழில் மாற்றிக்கொள்ளட்டும். திமுக அரசின் தோல்விகளை மறைக்க அவர்கள் போடும் நாடகம் தொடர்கிறது.

தமிழ்நாட்டை எத்தனை ஆண்டுகளாக ஆட்சி செய்துள்ளார்கள்? இப்போது ஏன் ரூபாய் குறியீட்டை மாற்றியுள்ளார்கள்? திமுக எப்போதும் பிரிவினைவாதத்தையே பேசுகிறது. தேச விரோத மனநிலையுடன் தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிராக அவர்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றனர். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Trending News

Latest News

You May Like