இந்த நாட்டில் காலை 11 மணி முதல் 4 மணி வரை திறந்த வெளியில் வேலை செய்ய தடை..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/dac1d817b4f191da2c3fe872f3b1cd32.jpg?width=836&height=470&resizemode=4)
குவைத் நாட்டின் வழக்கமாக மே மாதத்தின் இறுதியில் தொடங்கும் கோடைக் காலம் நவம்பர் வரை நீடிக்கும்.நடப்பாண்டிலும் இதேநிலை தான். தற்போது குவைத் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 46 டிகிரி செல்சியஸிற்கு மேல் வெப்பம் வாட்டி வதைக்கிறது. இதனால் திறந்த வெளியில் வேலை செய்பவர்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இவர்களின் நலன் கருதி குவைத் நாட்டின் மனிதவள மேம்பாட்டு பொது ஆணையம் முக்கியமான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், காலை 11 மணி முதல் 4 மணி வரை திறந்த வெளியில் தொழிலாளர்கள் வேலை செய்வதற்கு தடை விதிக்கப்படுகிறது.
இந்த உத்தரவு ஜூன் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வந்தது. ஆகஸ்ட் மாத இறுதி வரை அமலில் இருக்கும். தொழிலாளர்களின் பாதுகாப்பு தான் முக்கியம். அதற்காக அரசு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறிப்பாக கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பெரிதும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
அரசின் உத்தரவை மீறி நடப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் வெயிலின் தாக்கம் இல்லாத மற்ற சமயங்களில் வேலைகளை மேற்கொண்டு முடிந்தவரை சமாளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக புகார்கள் அளிக்க விரும்பினால் இலவச தொலைபேசி எண்ணையும் பகிர்ந்துள்ளனர். இதன்மூலம் தகவல் தெரிவித்தால் வேலை நடைபெறும் இடத்திற்கு நேரில் சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.