1. Home
  2. தமிழ்நாடு

பயங்கரவாதிகளை நேரில் பார்த்த பெண் பகீர் வாக்குமூலம்..!

1

பஹல்காம் தாக்குதலை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகளில் இருவரைத் தான் நேரில் கண்டதாகவும், அவர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்பூரைச் சேர்ந்த ஏக்தா திவாரி என்ற பெண் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

பஹல்காம் தாக்குதலை நடத்திய மூன்று பயங்கரவாதிகளின் ஓவியங்களை பாதுகாப்பு முகமைகள் வெளியிட்டுள்ளன. இந்த மூவரையும் பற்றிய தகவல் அளிப்போருக்கு தலா ரூ. 20 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில்தான், ஜம்மு காஷ்மீர் சென்றுவிட்டு சமீபத்தில் திரும்பிய ஜான்பூரைச் சேர்ந்த ஏக்தா திவாரி, வெளியிடப்பட்ட ஓவியங்களில் உள்ள பயங்கரவாதிகளில் இருவருடன் தங்களது குழு மோதலில் ஈடுபட்டதாகக் கூறியுள்ளார்.

இது குறித்து ஏக்தா திவாரி கூறுகையில், "எங்கள் குழுவில் 20 பேர் இருந்தோம். ஏப்ரல் 13 அன்று ஜம்மு காஷ்மீரில் பல்வேறு இடங்களுக்குச் செல்ல ஆரம்பித்தோம். ஏப்ரல் 20 அன்று பஹல்காம் சென்றோம். அன்று எங்கள் குழுவினருக்கு ஏதோ சந்தேகம் ஏற்பட்டது. அதனால், தாக்குதல் நடந்த பைசரன் பகுதிக்கு சுமார் 500 மீட்டர் முன்பாகவே அனைவரும் இறங்கினோம். சுற்றிலும் இருந்த சிலரின் நோக்கம் சரியாகத் தோன்றவில்லை. அவர்கள் எங்களிடம் குரான் படிக்கச் சொன்னார்கள்" என்றார்.

தொடர்ந்து ஏக்தா கூறியதாவது: "நாங்கள் கோவேறு கழுதைகளில் (mule) ஏறிக்கொண்டிருந்தபோது, இரண்டு பேர் எங்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் என்னைப் பற்றியும், எங்கள் குழுவில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்றும் விசாரித்தனர். நாங்கள் என்ன மதம், இந்துவா முஸ்லிமா என்றும் கேட்டனர். மேலும், குரான் படிக்கச் சொன்னார்கள். ஏன் ருத்ராட்சம் அணிந்திருக்கிறீர்கள் என்றும் கேட்டனர். என் சகோதரர் ருத்ராட்சம் அணிய பிடிக்கும் என்று சொன்னபோது, அவர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் நாங்கள் அங்கிருந்து இறங்கி, மற்ற கோவேறு கழுதை ஓட்டுபவர்களின் உதவியுடன் திரும்பிவிட்டோம்."

சிறிது நேரத்திலேயே, அவர்களில் ஒருவருக்கு ஒரு அழைப்பு வந்தது என்றும், சிறிது தூரம் சென்ற பிறகு, அவர் தொலைபேசியில் ரகசிய குறியீட்டு வார்த்தைகளில் "பிளான்-ஏ தோல்வியடைந்துவிட்டது" என்று கூறியதாகவும் ஏக்தா திவாரி தெரிவித்துள்ளார். 35 துப்பாக்கிகளை அனுப்புவது குறித்தும் அவர்கள் பேசினர் என்றும் அவர் கூறினார். "இந்த விஷயங்கள் என் சந்தேகத்தை ஆழப்படுத்தின. 35 துப்பாக்கிகள் பற்றி பேசிய பையனின் புகைப்படம் என்னிடம் உள்ளது. பயங்கரவாதிகளின் ஓவியங்கள் வெளியான பிறகு, நான் அவரை அடையாளம் கண்டுகொண்டேன்" என்று ஏக்தா திவாரி தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Trending News

Latest News

You May Like