துணை முதல்வர் உதயநிதியிடம் மனு கொடுக்க முடியாததால் பெண் தர்ணா!

தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மாவட்டத்திலுள்ள திட்ட வளர்ச்சி பணிகள் குறித்து அவற்றின் செயல்பாடுகள் குறித்து அரசு அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த நிகழ்வை அடுத்து தேனி புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்களின் வசதிக்காக மூன்று வழித்தடங்களில் 9 மினி பேருந்துகள் சேவையை உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அப்போது தேனி மாவட்டம் கடமலைகுண்டு ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த ஷீலா (53) என்ற பெண் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை மனு கொடுக்க வந்தார். ஆனால், அவரை மனு கொடுக்க விடாமல் அதிகாரிகள் தடுத்ததாகத் தெரிகிறது. எனவே, மனுவை தரையில் போட்டு நடவடிக்கை வேண்டும் என வலியுறுத்தி கண்ணீருடன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனை அடுத்து அவரை காவல்துறை அதிகாரிகள் குண்டுக் கட்டாக தூக்கி வெளியேற்றினர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஷீலா, "எனக்கு சொந்தமான நிலத்தில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு மனு கொடுத்தேன். அதன் அடிப்படையில் வீடு கட்டுவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டது. எனது உறவினரும் காவல் அதிகாரியுமான ராஜசேகரன் அந்த நிலத்தில் தனக்கும் பங்கு இருப்பதாக கூறி எனக்கு வீடு வழங்கக் கூடாது என அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்து நிறுத்தியுள்ளார்.
எனவே, இது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தேன். ஆனால் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, அரசு நிகழ்ச்சிக்காக வருகை தந்த துணை முதல்வரிடம் கோரிக்கை மனு கொடுப்பதற்காக இங்கு வந்தேன். அப்போது என்னை துணை முதலமைச்சரை சந்திக்க விடாமல் தடுத்து நிறுத்தினர். இதனைக் கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டேன். இருந்தும் என்னை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றி விட்டனர்,"என்று கூறினார்.