குடும்ப தகராறில் கணவனை கொன்று செப்டிக் டேங்கில் வீசிய மனைவி.. 9 ஆண்டுகளுக்கு பின் கைது!

சிவகங்கையை சேர்ந்த சீராளன் என்பவரின் வீட்டில் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் பணி கடந்த 9-ம் தேதி நடைபெற்றது. அப்போது டேங்கில் இருந்து ஒரு ஆணின் சட்டை, கைலி, கண்ணாடி துண்டுகள், மனித எலும்பு கூடு உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டன. இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
விசாரணையில், இந்த வீட்டில் ஏற்கனவே ஆம்னி பேருந்து ஓட்டுநரான பாண்டியன் என்பவர் குடியிருந்துள்ளார். இவரது மனைவி சுகந்தி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் சென்னையில் வேலை பார்த்து வந்த பாண்டியன் எப்போதாவது தேவகோட்டைக்கு வருவது வழக்கம். இதே போல் 2014-ல் தேவகோட்டை வந்த பாண்டி குடித்து விட்டு மனைவி சுகந்தியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதில் இருவருக்கும் இடையே மோதல் நடந்துள்ளது. அப்போது பாண்டியின் தலை சுவற்றில் மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவரது உடலை தனது வீட்டின் கழிப்பறை தொட்டியில் சுகந்தி போட்டுள்ளார். 6 மாதத்திற்கு பின் அந்த வீட்டில் இருந்து காலி செய்துள்ளார். இதனிடையே பாண்டியனை காணவில்லை என அவரது தந்தை காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திய போது தனது கணவர் வெளியூரில் வேலை பார்ப்பதாகவும், மாதந்தோறும் தனக்கு பணம் அனுப்புவதாகவும் சுகந்தி கூறியுள்ளார். இதையடுத்து அந்த புகார் வாபஸ் பெறப்பட்டது. இந்நிலையில் சீராளன் தனது வீட்டின் கழிப்பறை தொட்டியை சுத்தம் செய்த போது கிடைத்த எழும்புக்கூடு மூலம் பாண்டியன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து கணவரை கொலை செய்த சுகந்தியை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் பாண்டியனின் இறப்பில் சந்தேகம் இருப்பத்தாக தெரிவித்த அவரது உறவினர்கள் பாண்டியனின் உடலை சுகந்தி மட்டும் தனியாக செப்டிக் டேங்கில் வீசியிருக்க முடியாது எனவே சுகந்திக்கு அவரது உறவினர்கள் உதவியிருக்க கூடும் என்று சந்தேகிப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.