2026 சட்டப்பேரவை தேர்தலில் யாருடன் கூட்டணி..? - ஓ.பன்னீர்செல்வம் பேட்டி..!
மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து அதிமுக தொண்டர்கள் மீட்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டார். இந்த தேர்தலில் அவர் இரண்டாவது இடம் பெற்று தோல்வியடைந்தார். இருப்பினும் அதன் பின்னர் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பங்கேற்ற பின்னர் நடைபெற்ற கூட்டணி கட்சியினர் கூட்டத்தில் அவர் பங்கேற்று இருந்தார்.
மேலும் என்டிஏ கூட்டணி சார்பில் ஆந்திராவில் முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பொறுப்பேற்ற நிகழ்ச்சியிலும், ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று இருந்தார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சென்னைக்கு விமானம் மூலம் வருகை தந்த அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவரிடம் 2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலிலும் பாஜக பாமக உடனான கூட்டணி தொடருமா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், ”உறுதியாக கூட்டணி தொடரும்” என்றார்.
மேலும் சசிகலா மீண்டும் அதிமுகவை ஒருங்கிணைக்க உள்ளதாக அறிவித்து தீவிர அரசியலுக்கு வருகை தந்துள்ளது, அரசியலில் எந்த மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்தும் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், ”இதை சசிகலாவிடம் தான் கேட்க வேண்டும்” என்று கூறிவிட்டு கிளம்பி சென்றார். ஓ.பன்னீர்செல்வத்தை வரவேற்பதற்காக அவருடைய ஆதரவாளர்கள் ஏராளமானோர் சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.