தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா? – முதல்வர் முக்கிய ஆலோசனை!!
கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்குநாள் குறைந்து வருகிறது. ஆனால் ஒமைக்ரான் குறித்த அச்சம் இன்னும் விலகவில்லை. இந்தநிலையில் வருகிற 15ஆம் தேதியுடன் தமிழகத்தில் ஊரடங்கு முடிவடைகிறது.
எனவே தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து நாளை உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை தலைமைச்செயலகத்தில் காலை 10.30 மணிக்கு கூட்டம் நடைபெறும்.
ஒமைக்ரான் அச்சுறுத்தல் இருக்கும் நிலையில் ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கலாமா அல்லது தற்போதுள்ள நிலை தொடரலாமா என்பது குறித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்துவார்.
இந்த கூட்டத்தில் தலைமைச்செயலாளர் இறையன்பு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை முதன்மைச்செயலாளர் குமார் ஜெயந்த், சுகாதாரத்துறை முதன்மைச்செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
newstm.in