2026 தேர்தலில் திமுகவிடம் 10 தொகுதிகளை கேட்க முடிவு? மார்க்சிஸ்ட் செயலாளர் சண்முகம்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கூறியதாவது: வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூடுதல் தொகுதிகளை கேட்க முடிவு செய்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் எம்எல்ஏக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று கட்சியின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் குறைந்த தொகுதிகளில் போட்டியிட்டோம். திமுக கொடுத்த சட்டப்பேரவைத் தொகுதிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த அணுகுமுறை வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் தொடரக்கூடாது.
2021 சட்டப்பேரவைத் தேர்தலில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் மட்டுமே எங்களுக்கு ஒதுக்கப்பட்டது. கூடுதல் தொகுதி வேண்டும் என்று திமுக தலைமையிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை பேச்சுவார்த்தை நடத்தியது. மேலும், இறுதி வரை பேச்சுவார்த்தையின் அடிப்படையில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி வெற்ற பெற கூடாது என்பதற்காக 6 தொகுதிகளில் போட்டியிட்டோம். தற்போது, 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், அந்த தேர்தலுக்கு முன்கூட்டியே திட்டமிட வேண்டிய நிலை உள்ளது. இந்த தேர்தலில் இரட்டை இலக்க எண்ணிக்கையில் போட்டியிடுவதற்காக முடிவு செய்யப்பட்டுள்ளது.
கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டுக் கொடுப்பதால் திமுக தலைமைக்கு பயனுள்ளதாக இருக்கும். கூட்டணிக் கட்சிகளை அரவணைத்து செல்லும் பொறுப்பில் திமுக இருக்கிறது. எதிர் காலத்திலும் திமுக தலைமை இதே போல நகர வேண்டும். திமுக அரசு கொடுத்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார்.
திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கொடுத்த 6 தொகுதிகளை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளவில்லை என்று மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். இதனால், திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு விவகாரத்தில் இரு கட்சிகளிடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணியாக உருவாக வேண்டும் என்பதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதற்காக 6 தொகுதிகளில் போட்டியிட சம்மதம் தெரிவிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு எம்எல்ஏக்கள் இருப்பர்.
ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு போட்டியிடுவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் இருந்துள்ளார். தற்போது, அந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. இதனால், அந்தப் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னம் பொதுமக்களுக்கு மறந்து போகும் நிலையில் உள்ளது.
இதற்கான காரணம் பாஜகவை எதிர்ப்பதற்காக திமுக கூட்டணியில் இருக்க வேண்டும் என்பதே ஆகும். கடந்த 2021 பேரவைத் தேர்தில்ல 6 தொகுதிகளில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவிடம் இருந்து 10 பேரவைத் தொகுதிகளை கேட்டும் முடிவில் உள்ளதாக கூறப்படுகிறது.