ரத்த வெள்ளத்தில் மனைவி.. கணவரின் செல்போன் சுவிட்ச் ஆப்.. விசாரணையில் பகீர் தகவல் !

மனைவி மரணம் தொடர்பாக தகவல் தெரிவிக்க கணவரின் செல்போனுக்கு தொடர்புகொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
சென்னை அடுத்த கேளம்பாக்கம் அருகே மேலக்கோட்டையூர் பகுதியைச் சேர்ந்த கணேசன் (42), நாமக்கல்லில் உள்ள தனியார் லாரி நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ராஜேஸ்வரி (37). கணேசன்- ராஜேஸ்வரிக்கு கடந்த 6 மாதத்துக்கு முன் திருமணம் முடிந்தது.
இதனையடுத்து இருவரும் கணேசன் வீட்டில் ஒன்றாக வசித்து வந்தனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் கணேசன் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. மேலும் ராஜேஸ்வரியின் நடமாட்டமும் இல்லாததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து தாழம்பூர் போலீசார் அங்கு சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் படுக்கை அறையில் ரத்த காயத்துடன் ராஜேஸ்வரி சடலமாக கிடந்தார். இதனைஅறிந்து அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து போலீசார் சடலத்தை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
பின்னர், ராஜேஸ்வரியின் கணவர் கணேசனை தொடர்பு கொண்டபோது, அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் அக்கம்பக்கத்தினரிடம் நடத்திய விசாரணையில், திருமணமாகி குடி வந்தது முதல் கணவன் - மனைவி இருவருக்கும் தினமும் சண்டை ஏற்படும். கணேசன் குடித்து விட்டு வந்து தகராறு செய்வார் என்று கூறினர்.
கடந்த 24ம் தேதி மாலை தகராறு ஏற்பட்டதாகவும் அதன் பிறகு கணேசன் வீட்டுக்கு வரவில்லை என தெரிவித்தனர்.தொடர்ந்து போலீசார், சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து ராஜேஸ்வரியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள கணேசனை வலைவீசி தேடி வருகின்றனர்.
newstm.in