ஏன் ஹெல்மட் அணியவில்லை.. ஆட்டோ டிரைவருக்கு அபராதம் விதித்த வினோத போலீஸ் !

திருச்சியில் போக்குவரத்தை சரிசெய்யும் வகையிலும், விபத்துகளை குறைக்கும் வகையிலும் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதனொரு கட்டமாக போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோரின் வாகன எண்ணை குறித்துக்கொண்டு, இணைய வழியாக அவர்களின் தொலைபேசி எண்ணுக்கு அபராதம் குறித்த குறுந்தகவலை போலீசார் அனுப்பி வருகின்றனர்.
போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு ஒரு தரப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஆனால் தாங்கள் எந்த இடத்தில், என்ன தவறு செய்தோம் என்பது தெரியாத நிலையில் அபராதம் செலுத்தக்கூறி வெறுமனே குறுந்தகவல் மட்டும் வருவதாக வாகன ஓட்டிகள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் திருச்சியில் ஆட்டோ ஓட்டுநருக்கு ஏன் ஹெல்மட் அணியவில்லை என கூறி அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிராப்பட்டி பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (32) என்ற இளைஞர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் கடந்த 6ஆம் தேதி திருச்சி தில்லை நகர் வழியாக பயணி ஒருவரை ஏற்றிக்கொண்டு சென்றப்போது இவரின் செல்போனுக்கு திருச்சி மாநகர காவல்துறையிலிருந்து குறுந்தகவல் வந்துள்ளது.
அதில் தலைக்கவசம் அணியாத காரணத்துக்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருப்பதை அறிந்து அவர் அதிர்ச்சியடைந்தார். ஆனால் ஆட்டோ ஓட்டும் தனக்கு ஹெல்மட் ஏன் என அவர் குழப்பம் அடைந்துள்ளார்.
இந்த வினோதச் சம்பவம் சக ஆட்டோ ஓட்டுநர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக ஆட்டோ ஓட்டுநர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
newstm.in