மக்காச்சோளத்திற்கு, 1 சதவீதம் கூடுதல் வரி விதித்திருப்பது ஏன்..? சீமான் கண்டனம்..!

நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை:
சிறு, குறு விவசாயிகள், தங்களிடம் இருக்கும் சிறிதளவு விளைநிலத்தில், பெரும்பாலும் பருவ மழையை மட்டுமே நம்பி, மானாவாரியாக பயிரிட்டு விளைவிக்கக்கூடிய பயிர், மக்காச்சோளம்.
தமிழகத்தில் விளைவிக்கப்படும் மக்காச்சோளத்தில், 60 சதவீதம், மதிப்பூட்டப்பட்டு உணவு வகைகளுக்கும், கால்நடைகள், கோழி தீவனங்களுக்கும் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், கரும்பு சக்கைக்கு மாற்றாக, எத்தனால் உற்பத்திக்கும், மக்காச்சோளம் பயன்படுத்தப்படுகிறது.
தற்போது, தமிழகத்தில் ஆண்டுக்கு 50 லட்சம் டன் மக்காச்சோளம் தேவை. ஆனால், 30 லட்சம் டன் மட்டுமே உற்பத்தி ஆகிறது. மீதம் ஆந்திரா, கர்நாடகா, பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பெறப்படுகிறது.
இந்நிலையில், மக்காச்சோள உற்பத்தியை அதிகரிக்கத் தேவையான உதவிகளை செய்து ஊக்கம் அளித்திருக்க வேண்டும்.
அதைச் செய்யத் தவறியதோடு, அதற்கு நேர் எதிராக சிறிதும் மனச்சாட்சி இன்றி, தி.மு.க., அரசு 1 சதவீதம் கூடுதல் வரி விதித்திருப்பது கொடுங்கோன்மை.
விளைபொருட்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என, நெடுங்காலமாக விவசாயிகள் போராடி வருகின்றனர்.
அவற்றை கண்டுகொள்ளாத தி.மு.க., அரசு, தற்போது, மக்காச்சோளத்திற்கு கூடுதல் வரி விதித்திருப்பது, வேளாண்மையை முற்றிலும் அழிப்பதற்கு வழிவகுக்கும். எனவே, மக்காச்சோளம் மீதான கூடுதல் வரி விதிப்பை, அரசு திரும்பப் பெற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது