1. Home
  2. தமிழ்நாடு

பொங்கல் பரிசில் 1000 ரொக்கம் அறிவிக்காதது ஏன்..? அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்..!

Q

2025ம் ஆண்டுக்கான பொங்கல் பரிசு தொகுப்பை தமிழக அரசு நேற்று அறிவித்தது. ஆனால் அந்த தொகுப்பு அறிவிப்பின்போது, மக்களுக்கு பொங்கல் ரொக்கம் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் பொங்கல் பரிசு ரொக்கம் அறிவிக்காதது ஏன் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்து உள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் கூறுகையில்," பொங்கல் தொகுப்பில் இந்த முறை ரூ.1,000 வழங்கப்படவில்லை. கடந்த ஆண்டு புயல், மழை போன்ற பேரிடர்களுக்கு அரசு ரூ.2 ஆயிரம் கோடி வரை செலவு செய்துவிட்டது. பேரிடருக்கான மாநில அரசு நிதியை விடுவிக்கும்படி மத்திய அரசிடம் கோரினோம்.

 

ரூ.3 ஆயிரம் கோடி கேட்ட நிலையில், ரூ.275 கோடி மட்டுமே மத்திய அரசு வழங்கியது. பொங்கல் தொகுப்புக்கு தற்போது வரை ரூ.280 கோடி செலவிடப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 ஐ பொங்கலுக்கு முன்பு வழங்கிட பரிசீலிக்கிறோம்" என்றார்.

முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 2025 தைப் பொங்கல் திருவிழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு வழங்கப்பட உள்ளது. இதனால் 2,20,94,585 அரிசி குடும்ப அட்டைதாரர்களும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களும் பயன்பெறுவார்கள்.

அரசுக்கு ரூ.249.76 கோடி செலவை ஏற்படுத்தும். மேலும் பொங்கல் திருவிழாவை ஒட்டி இலவச வேட்டி, சேலைகள் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. இவற்றை பொங்கல் பரிசு தொகுப்புடன் சேர்த்து வழங்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

Trending News

Latest News

You May Like