1. Home
  2. தமிழ்நாடு

சி.வி.சண்முகத்துடன் சந்திப்பு ஏன்? பா.ஜ.க. மாநில தலைவர் விளக்கம்..!

1

அ.தி.மு.க. எம்.பியும் முன்னாள் அமைச்சருமான சி.வி. சண்முகத்தை தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நயினார் நாகேந்திரன்: “நாங்க ஒரு தாய் பிள்ளைகள்தானே... நட்பின் அடிப்படையில் தம்பியை பார்க்க வந்தேன். கூட்டணியே இல்லைன்னாலும் இவரை பார்க்க வருவேன்.அரசியல் தொடர்பாக எதுவும் பேசவில்லை” என்று கூறினார்.

அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க வேண்டும், கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள், நீக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் மற்றும் ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வாக இருக்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் இதே கருத்தை வலியுறுத்தி செய்தியாளர்களை சந்தித்திருந்தார். செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்த அடுத்த நாளே அவரை அ.தி.மு.க.வின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்க உத்தரவிட்டிருந்தார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. தொடர்ந்து, பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பா.ஜ.க. முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை உட்பட பலரும் அ.தி.மு.க. ஒருங்கிணைய வேண்டும் என கருத்து தெரிவித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு விழுப்புரம் அருகேயுள்ள திருவாமாத்தூரில் அ.தி.மு.க. சார்பில் திமுக அரசை கண்டித்து தெரு முனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் பேசினார். அதில், “எந்தக் கட்சி அவர்களுக்கு அடையாளம் கொடுத்ததோ... எந்தக் கட்சி அவர்களுக்கு பதவி கொடுத்து அழகு பார்த்ததோ... அந்தக் கட்சியின் தலைமைக் கழக அலுவலகத்தை காலால் எட்டி உதைத்தவர்களை, துரோகிகளை அ.தி.மு.க. கட்சியில் இருந்து நீக்கியிருக்கிறோம். அந்தக் கட்சி இணைய வேண்டும் என சொல்வதற்கு நீங்கள் யார்?” என காட்டமாக பேசியிருந்தார். சி.வி. சண்முகத்தின் இந்த பேச்சு அ.தி.மு.க.வில் மீண்டும் இணைப்புக்கு சாத்தியம் இல்லை என்பதை காட்டுவது போல இருப்பதாக பேச்சு எழுந்த நிலையில், நயினார் நாகேந்திரன் நேற்று அவரை சந்தித்திருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Trending News

Latest News

You May Like