1. Home
  2. தமிழ்நாடு

எதற்காக நீங்கள் கண்ணதாசனை அங்கே இழுத்தீர்கள் : வைரமுத்துவுக்கு கண்ணதாசன் மகன் எச்சரிக்கை!

1

இசைவெளியீட்டு விழா ஒன்றில் கவிஞர் வைரமுத்து கண்ணதாசன் பாடல் வரிகளைக் குறிப்பிட்டு பேசினார். இதற்கு கடுமையான ஆட்சேபம் தெரிவித்துள்ளார் அவரது மகன் அண்ணாதுரை. இதுகுறித்து அவரது யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அவர், “ஒரு படத்தின் இசைவெளியீட்டு விழாவில் நீங்கள் பேசிய வீடியோ ஒன்றைப் பார்த்தேன். அதில் மதுவின் கொடுமையைப் பற்றி ஒரு பாடல் ஒன்றை நீங்கள் எழுதியிருந்தீர்கள். அதன் சிறப்பை விளக்கும் நீங்கள் சம்பந்தமே இல்லாமல் இடையிடையே கண்ணதாசன் பாடல் வரிகளையும் குறிப்பிட்டு பேசியிருக்கிறீர்கள். எதற்காக நீங்கள் கண்ணதாசனை அங்கே இழுத்தீர்கள் என்று தெரியவில்லை. இதேபோன்று தான் சில காலம் முன்பு வார இதழ் ஒன்றில் நீங்கள் கதை எழுதி வந்தீர்கள்.

அந்தக் கதை முடிவுபெற்றபோது, ஜெயகாந்தன் எழுதிய கடிதம் ஒன்றை நீங்கள் காட்டி இருந்தீர்கள். அதில், தனக்குப் பின்னால் சிறுகதை உலகம் என்ன ஆகுமோ என்று ஜெயகாந்தன் கவலைப்பட்டதாகவும் அதற்கு வைரமுத்து சரியான மாற்றாக இருக்கிறார் என அவர் கடிதம் எழுதி இருப்பதாக சொல்லி இருந்தீர்கள். ஆனால், நீங்கள் கதை எழுத ஆரம்பித்ததில் இருந்து முடிக்கும் வரை ஜெயகாந்தன் கோமா நிலையில் இருந்ததாக ஜெயகாந்தன் மகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

இப்பொழுது இசை வெளியீட்டு விழாவில் கண்ணதாசன் கவிதையை நீங்கள் பயன்படுத்தியதற்கு வருகிறேன். இதை ஒரு ஸ்பிளிட் ஸ்டேட்மென்ட்டாக எடுத்துக் கொள்கிறேன். ஒரு கருத்தை ஒரு இடத்தில் சொல்லிவிட்டு, அதை அப்படியே விட்டு விடுவது. பின்பு, அந்தக் கருத்தை ஒட்டி எதாவது ஒரு விஷயத்தை சொல்வதுதான் ஸ்பிளிட் ஸ்டேட்மென்ட்.

அப்படி, நீங்கள் கண்ணதாசன் கவிதையை சொல்லிவிட்டு, பின்பு வேறு டாப்பிக் எல்லாம் பேசிவிட்டு, ‘ஒரு சொட்டு மது கூட என் வயிற்றுக்குள் செல்லவில்லை’ என்று கூறுகிறீர்கள். அப்போது கேட்பவர்களுக்கு கண்ணதாசன் கவிதையையும் மதுவையும் தானே ஒப்பிடத் தோன்றும்.

மதுவுக்கு எதிராக என்.எஸ். கிருஷ்ணன், எம்.ஜி.ஆரின் படங்களைத் தவிர வேறு எந்தப் படங்களிலும் பாடல்கள் வரவில்லை என்று சொல்கிறீர்கள். ஆனால், 1973-ல் ‘பாசதீபம்’ படத்தில் மதுவுக்கு எதிராக ஒரு பாடல் வரும் என்பதை உங்களுக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன். இது மதுவின் கொடுமை பற்றி கண்ணதாசன் எழுதிய பாடல். இதோடு உங்கள் பாடலை ஒப்பிடச் சொல்லவில்லை. நீங்கள் மட்டும்தான் மதுவுக்கு எதிராக பாடல் எழுதி இருக்கிறீர்கள் என்று சொன்னீர்கள் அல்லவா… அது இல்லை என்பதற்காகதான் இதைச் சொல்கிறேன்!

கலைஞர் கருணாநிதி, முன்பு உங்களிடம் தினமும் காலை 5.30 மணிக்கு பேசுவார் என்று சொல்கிறீர்களே… ஏன் ஒருமுறை கூட மதுக்கடையை மூடச் சொல்லி நீங்கள் அவரிடம் சொல்லவில்லை? இனிமேல் நீங்கள் கண்ணதாசன் குறித்து புகழ்ந்தோ, இகழ்ந்தோ பேசவேண்டாம். காரணம், வாய்நிறைய மலத்தை வைத்துக் கொண்டு நீங்கள் புகழ்ந்தாலும் இகழ்ந்தாலும் நாற்றம் தான் அடிக்கும்” என்று கடுமையாகப் பேசியுள்ளார்.

Trending News

Latest News

You May Like