அமைச்சர் வேலுமணி இல்ல திருமண விழாவில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்காதது ஏன்?
அதிமுக தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ் பி வேலுமணியின் மகன் விஜய் விகாசுக்கும், தீக்ஷனா என்பவருக்கும் கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள பிரபல மஹாலில் திருமணம் நடைபெற்றது.
இந்த திருமண வைபவத்தில் செங்கோட்டையன், தங்கமணி உள்ளிட்ட அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ க்கள் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்கள் நேரில் கலந்து கொண்டனர். அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், நடிகர், நடிகைகள் என பல்வேறு தரப்பினரும் விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
குறிப்பாக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, தெலங்கானா மாநில முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், குஷ்பூ உள்ளிட்ட பா.ஜ.க பிரபலங்கள் எஸ்.பி வேலுமணியின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டனர்.
ஆனால் இந்த விழாவில் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்காதது பேசுபொருளாகியுள்ளது.
பாஜகவைச் சேர்ந்து முக்கிய பிரமுகர்கள் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றதன் காரணமாக எடப்பாடி பழனிசாமி இந்த விழாவில் கலந்து கொள்ளாமல் இருந்திருக்கலாம் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், வரும் 10 ஆம் தேதி கொடியா வளாகத்தில் நடைபெறவுள்ள மணமக்களின் வரவேற்பு நிகழ்ச்சி எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார் என்றும் மாவட்ட அதிமுக வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
தேனியில் நேற்று நடைபெற்ற ஜெயலலிதாலின் 77 வது பிறந்த நாள் விழாவில் பேசிய எடப்பாடி பழனிசாமி, 'பாஜகவை பார்த்து அதிமுக பயப்படவில்லை என்றும், திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பதே எங்களின் தலையான கடமை' என்று கடுமையாக சாடியிருந்தார்.
இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சரான எஸ்.பி.வேலுமணி இல்லத் திருமண விழாவில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அக்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர் என்பதும், அதிமுக முன்னாள் அமைச்சர்களிடம் அண்ணாமலை கைகுலுக்கி நலம் விசாரித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.