தமிழ் பட இயக்குநருக்கு ஒரு மாதம் சிறை - காரணம் என்ன?
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/049f3893c0270cbe07faed0af443b106.webp?width=836&height=470&resizemode=4)
இயக்குனர் பாலாஜி இயக்கத்தில் பிரஜின் நடிப்பில் உருவாகிய திரைப்படம் ‘டி3’ (D3). இத்திரைப்படத்தில் வித்யா பிரதீப், சார்லீ என பலர் நடித்துள்ளனர். இப்படத்தினை பி மாஸ் என்டர்டைன்மெண்ட் & ஜே கே எம் புரொடக்ஷன் என்னும் தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் ஸ்ரீஜித் இசையமைத்திருந்தார்.
‘டி3’ என்ற பெயரில் படம் தயாரிக்க சாமுவேல் காட்சனிடம் தயாரிப்பாளர் மனோஜ் ரூ.4 கோடி பெற்றார். லாபத்தில் 60 சதவீதம் தருவதாக கூறியிருந்த நிலையில், முன்னறிவிப்பு இன்றி படத்தை ஓடிடியில் வெளியிட்டதாக சாமுவேல் வழக்கு தொடர்ந்தார்
‘டி 3’ படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும் படத்தின் மூலம் கிடைத்த வருவாய் விவரங்களை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.
ஆனால் இந்த உத்தரவை மீறி, படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட்டதாக பட இயக்குனர் பாலாஜி, தயாரிப்பாளர் மனோஜ் ஆகியோருக்கு எதிராக சாமுவேல் காட்சன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேல் முருகன், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரை நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி நேரில் ஆஜரான இயக்குனர் பாலாஜி, நீதிமன்ற உத்தரவை மீறி படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட்டதை ஒப்புக் கொண்டார். இதனையடுத்து, அவருக்கு ஒரு மாத சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.