யாரை மிரட்டி பார்க்கிறார் அண்ணாமலை..? இந்த உருட்டல் மிரட்டல் எல்லாம் எங்கக்கிட்ட பலிக்காது.. சீறிய சேகர்பாபு!

சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இந்தி மொழிக்கு எதிராக திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் இந்தியில் எழுதப்பட்ட பெயர்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திமுகவினருக்கு தைரியம் இருந்தால் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வரட்டும் என கூறியிருந்தார். இந்நிலையில் அமைச்சர் சேகர் பாபு, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அண்ணமலை கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு, அண்ணாமலை யாரை மிரட்டி பார்க்கிறார்? அவருடைய வார்த்தைகளில் இருந்து தெரிகிறது அவர் மிரட்டி பார்க்கிறார் என்று. இதையெல்லாம் சந்தித்து நெருப்பாற்றில் நீந்திய இயக்கம் தான் திராவிட முன்னேற்ற கழகம். பல பூகம்பங்களை பல இன்னல்களை பல பேரிடர்களை சந்தித்துதான் திராவிட முன்னேற்ற கழகம் இன்று ஆட்சிப் பொறுப்பில் அமைந்துள்ளது.
இந்த மிரட்டல் உருட்டல் எல்லாம் திமுகவிடம் பலிக்காது. ஏதாவது லெட்டர் பேட் இயக்கங்கள் இருக்கும். அவர்களை போய் மிரட்டி பார்க்க சொல்லுங்கள் என காட்டமாக பதில் அளித்தார். தொடர்ந்து பாஜக திட்டமான மக்கள் மருந்தகம் திட்டத்திற்கு தற்போது முதல்வர் மருந்தகம் என திமுக ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்வதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த சேகர் பாபு மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை யாராவது செயல்படுத்தி இருப்பார்கள்.
அந்த பெயரில் தமிழத்தில் எத்தனை மருந்தகங்கள் உள்ளன. மக்களுக்கு பயன்படும் திட்டங்களை செயல்படுத்துவது அந்தந்த முதல்வர்களின் சிந்தனையில் உதித்தது. அதைத்தான் தமிழக முதல்வர் செயல்படுத்தி வருகிறார். மக்களுக்கான திட்டங்களை கொச்சைப்படுத்துவதை தொடர்ந்து பாஜக செய்து வருகிறது. அந்த வகையில் இதுவும் ஒன்று.. என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.