வெளியான முக்கிய தகவல் : கோவை, விழுப்புரத்திற்கு பொறுப்பு அமைச்சர்கள் யார்?

தமிழகத்தில் அமைச்சர்கள் இல்லாத மாவட்டங்களில் அரசுத் திட்டங்கள் சென்று சேரவும், வளர்ச்சிப் பணிகளை கண்காணிக்கவும் பொறுப்பு அமைச்சர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நியமனம் செய்துள்ளார். செந்தில்பாலாஜி, பொன்முடி ராஜினாமாவால் விழுப்புரம், கோவை மாவட்டங்களின் பொறுப்பு அமைச்சர்கள் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த முறை செந்தில் பாலாஜி சிறை சென்றபோது கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக சு.முத்துசாமி நியமனம் செய்யப்பட்டார். செந்தில் பாலாஜி அமைச்சராக பொறுப்பு ஏற்றதும் அவருக்கு மீண்டும் கோவை மாவட்டமே வழங்கப்பட்டது. தற்போது செந்தில் பாலாஜி ராஜினாமா செய்துவிட்டதால், கோவைக்கு யார் பொறுப்பு அமைச்சர் என்ற கேள்வி எழுந்துள்ளது.
மீண்டும் முத்துசாமியே நியமிக்கப்படுவாரா அல்லது கூடுதல் துறைகள் கிடைக்காமல் வருத்தத்தில் உள்ள மு.பெ.சாமிநாதன் பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்படுவாரா என்ற கேள்விகள் திமுக வட்டாரங்களில் எழுந்துள்ளன.
அடுத்த ஒரு வருடத்தில் தேர்தல் வரவுள்ளதால் கோவையில் செந்தில் பாலாஜியை கவனம் செலுத்த வைக்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளது. இதனால் அவருக்கு ஒத்துழைக்கும் நபரே கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்படலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டம்
விழுப்புரம் மாவட்டத்திற்கு பொன்முடி, செஞ்சி மஸ்தான் என இரண்டு அமைச்சர்கள் இருந்தனர். ஆனால், இருவரின் அமைச்சர் பதவியையும் திமுக தலைமை பறித்துவிட்டது. இதனால் பெரிய மாவட்டமான விழுப்புரத்தில் அமைச்சர்கள் யாருமே இல்லதால் பொறுப்பு அமைச்சர் நியமிக்கும் சூழல் உருவாகியுள்ளது. கள்ளக்குறிச்சியை கவனித்து வரும் எ.வ.வேலு அல்லது அமைச்சர் கே.என்.நேரு ஆகியோரில் ஒருவர் விழுப்புரம் பொறுப்பு அமைச்சராக வரலாம் என்கிறார்கள் திமுகவினர்.
குறிப்பாக கே.என்.நேரு ஏற்கனவே நெல்லை மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக இருக்கிறார். சென்னை, திருச்சி, நெல்லை என அடிக்கடி அவரால் நீண்ட தூரம் பயணிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. திருச்சியில் இருந்து சென்னை செல்லும் வழியில் உள்ள விழுப்புரம் மாவட்டத்தை அவரிடம் கொடுத்தால் அவருடைய பணி இன்னும் எளிதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதேபோல கன்னியாகுமரிக்கு அமைச்சராக மனோ தங்கராஜ் வந்துவிட்டதால், அந்த மாவட்டத்தை கவனித்து வந்த தங்கம் தென்னரசு நெல்லைக்கு மாற்றப்படலாம் என்று திமுக வட்டாரங்கள் கூறுகின்றன. எனினும், பொறுப்பு அமைச்சர்கள் தொடர்பாக விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.