கடத்தல் லாரிகளின் உரிமையாளர்கள் மீது எப்போது நடவடிக்கை எடுக்கும் இந்தக் கையாலாகாத தி.மு.க., அரசு? அண்ணாமலை குற்றச்சாட்டு..!

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிக்கை: அனுமதியின்றி கேரளாவுக்குக் கனிமவளங்களைக் கடத்தியதாக, கோவை மாவட்டம், மதுக்கரை தி.மு.க., நகராட்சித் தலைவர் நூர்ஜகானின் மகன் ஷாரூக்கான் என்பவருக்குச் சொந்தமான இரண்டு டாரஸ் லாரிகள், கோவை மாவட்ட கனிம வளத்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
தமிழகத்தில் தி.மு.க., ஆட்சிக்கு வந்ததில் இருந்து, மாநிலம் முழுவதுமே கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. முழுக்க முழுக்க தி.மு.க.,வினரால் நடத்தப்படும் இந்தக் கொள்ளையால், தமிழக வளங்கள் பறிபோவதோடு, தமிழக மக்களுக்குத் தேவைப்படும் கட்டடப் பொருள்களுக்கும் பற்றாக்குறை நிலவுகிறது.
இதனால் அதிக விலை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழக மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். தி.மு.க.,வினர் பணம் சம்பாதிக்க, மாநிலத்தையே சுரண்டிக் கொழுத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், தி.மு.க., அரசு வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறது.
தமிழகம் முழுவதும் கனிமவளக் கடத்தலில் ஈடுபடும் பல்லாயிரக்கணக்கான லாரிகளில் சிக்கியது இரண்டு மட்டுமே. கோவை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, என கேரள எல்லை மாவட்டங்களில் ஓடும் கடத்தல் லாரிகளின் உரிமையாளர்கள் மீது எப்போது நடவடிக்கை எடுக்கும் இந்தக் கையாலாகாத தி.மு.க., அரசு? இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.