புதன்கிழமையில் என்ன செய்யலாம்..? எந்த தெய்வத்தை எப்படி வழிபட வேண்டும் ?

புதன் பகவான் வழிபாடு :
புதன்கிழமை புதன் பகவானை வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. கல்வி, வியாபாரம், புத்திசாலித்தனம் போன்ற விஷயங்களில் முன்னேற விரும்புபவர்கள் புதன் பகவானை வழிபடலாம். பூஜை அறையை நன்றாக சுத்தம் செய்து, புதன் பகவானுடைய படத்திற்கு முன்பு தாமரை கோலம் போட்டு, அதன்பின் ஒரு கலசத்தில் தண்ணீர் நிரப்பி, அதன்மேல் மாவிலை வைக்க வேண்டும். அந்த கலசத்தை புதன் பகவானாக பாவித்து, பச்சை துணியை அணிவித்து, பூக்களால் அலங்கரித்து கொள்ளுங்கள்.
புதன் பகவானுக்கு பச்சை காய்கறிகள் மற்றும் இனிப்பு பண்டங்களை நைவேத்தியமாக படைத்து இரண்டு அகல் விளக்குகளில் நெய் தீபம் ஏற்றி, தூபம், கற்பூரம் காட்டி வழிபட வேண்டும். காலை மற்றும் மாலை வேளைகளில் இதேபோல் வழிபாடு செய்ய வேண்டும். விரதம் இருக்க முடிந்தால், முழு நாள் விரதம் இருக்கலாம். அப்படி முடியாதவர்கள் பால், பழங்கள் போன்ற எளிய உணவுகளை உட்கொள்ளலாம்.
வியாபாரம் விருத்தி, வேலையில் பதவி உயர்வு, நினைத்த வேலை அமைய, வாழ்க்கையில் முன்னேற்றம் பெற புதன் பகவானை வேண்டிக் கொள்ளவும்.
புதன்கிழமை அன்று புதன் கோவிலுக்கு சென்று பச்சை வஸ்திரம், பச்சை பயறு போன்றவற்றை தானமாக வழங்கி வழிபாடு செய்யலாம். படிக்க வசதியற்ற குழந்தைகளுக்கு பேனா, புத்தகம், நோட்டு போன்றவற்றை தானம் செய்யலாம்.
புதன்கிழமையின் சிறப்புகள் :
புதன்கிழமை மகாவிஷ்ணுவிற்கு உகந்த நாள். புதன்கிழமையில் பெருமாள் கோவிலுக்கு சென்று, புதன் பகவானுக்குரிய தானியமான பச்சை பயறு வாங்கிக் கொடுப்பதால் ஜாதகத்தில் புதன் பகவானின் பலம் அதிகரிக்கும். புதன்கிழமை மகாலட்சுமியை வழிபட்டால் செல்வம், செழிப்பு பெருகும். புதன் கிரகம் கல்விக்கு காரகம் என்பதால், புதன்கிழமை குழந்தைகளின் கல்வி மேம்பாட்டிற்காக வழிபாடு செய்யலாம். திருமண தடை உள்ளவர்கள் புதன்கிழமை வழிபாடு செய்தால் விரைவில் திருமணம் நடக்கும்.
சந்தான பாக்கியம் இல்லாதவர்கள் புதன்கிழமை வழிபாடு செய்தால் குழந்தைப்பேறு கிடைக்கும். புதன்கிழமை, விநாயகப் பெருமானுக்கும் ஏற்ற கிழமை என்பதால் விநாயகரை வழிபட்டால் தடைகள் நீங்கும். ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு புதன்கிழமை வழிபாடு மிகவும் நல்ல பலனைத் தரும். புதன்கிழமை அசைவ சாப்பிடுவதை தவிர்த்தல் சிறப்பானதாகும்.