கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதன் பின்னணி என்ன?
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/a7ca4e3e3e1a1ca5f10ef6546cb11665.jpg?width=836&height=470&resizemode=4)
பாரம்பரியமாகப் பக்தர்கள் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வில் இவ்வாறு தண்ணீர் பீய்ச்சி அடிப்பது வழக்கம். அதாவது மக்கள் அனைவரும் நோயின்றி இருக்கவும், மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டும் என்றும் அவர்கள் நேர்த்திக் கடனாக மாலை அணிந்து 15 நாள் விரதம் இருப்பர். பின்று கள்ளழகர் வேடம் அணிந்து பாரம்பரிய முறைப்படி ஆட்டுத் தோல் தோப்பறைகள் மூலம் தண்ணீர் பீச்சி அடிப்பது வழக்கம்.
இத்திருவிழாவின் போது கள்ளழகர் வேடமிடும் பக்தர்கள் பாரம்பரிய முறைப்படி தண்ணீர் பீய்ச்சி அடிக்க பயன்படுத்தும் ஆட்டுத் தோல் தோப்பறை பைகளை விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி பகுதியில் உள்ள மக்கள் பரம்பரை பரம்பரையாகத் தயார் செய்து வருகின்றார்கள். அப்படி தயார் செய்யும் பைகளை சித்திரைத் திருவிழாவிற்காக மதுரையில் உள்ள தேர்முட்டி சாலை பகுதியில் விற்பனை செய்யப்படுகின்றன.
தோப்பறை செய்யும் தொழிலை சித்திரைத் திருவிழா வருவதற்கு மூன்று மாதம் முன்பு செய்யத் தொடங்கி விடுகின்றனர். வெள்ளை தோப்பறை, சிவப்பு தோப்பறை என இரண்டு வகையான தோப்பறைகள் உள்ளன. இதற்காக சந்தையிலிருந்து ஆட்டுத் தோலை வாங்கி அதன் முடியை எடுக்கக் கொடுத்துவிடுகின்றனர். பின்னர் வெள்ளைத் தோலை மட்டும் பாடம் பண்ணுவதற்கு மெஷினில் கொடுத்து விடுகின்றனர். அதன் பின்னர் அதை எடுத்து எடுத்து வந்து தோப்பு கட்டை வைத்து தேய்த்து பாடம் செய்கின்றன.
சித்திரை மாதம் கள்ளழகர் ஆற்றில் இறங்குவதற்கு முன்பு வரை இங்கேயே இருந்து ஒரு தொண்டாக இத்தொழிலைச் செய்து விற்பனை செய்கின்றன. இந்த தோப்பறைகளை அனைத்தும் ரூ.700 யிலிருந்து 2ஆயிரம் ரூபாய் வரைக்கும் விற்பனை செய்து வருகின்றனர். கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி மீண்டும் அழகர் கோவிலுக்குச் செல்லும் வரையிலும் இந்த வியாபாரத்தைச் செய்து வருவதாக கூறுகின்றனர்.
இங்கிருந்து வாங்கப்படும் தோப்பறை கள்ளழகர் காலையில் வைகை ஆற்றில் இறங்கும் போது கள்ளழகர் வேடமணிந்த பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப் பயன்படுத்துகின்றனர். இதற்காக பக்தர்கள் இரவிலிருந்தே வைகை ஆற்றில் அழகர் இறங்கும் இடத்தில் கூடுகின்றனர். பின்னர் அழகர் ராமராயர் மண்டபத்தில் எழுந்தருளும் போது பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சி அடிக்கின்றனர். அதன் பின்னரும் கள்ளழகர் ராமராயர் மண்டபத்திலிருந்து வண்டியூர் செல்லும் நிகழ்வின் போதும் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் நிகழ்வு நடைபெறும்.