குமரி விவேகானந்தர் மண்டபத்தின் சிறப்பு என்ன?
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/0c1d96114842b0123ccd2a27982f53ac.png?width=836&height=470&resizemode=4)
ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டின் கன்னியாகுமரிக்கு வந்துள்ளார்.
இதன்படி, நேற்று பிற்பகல் டெல்லி விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட பிரதமர் மோடி திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வந்தடைந்தார்.
பின்னர், அங்கிருந்து இந்திய ராணுவப் படையின் ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேட் தளத்தில் வந்த இறங்கினார்.
தொடர்ந்து, அங்கு 30 நிமிடம் ஓய்வெடுத்த பிரதமர், அங்கிருந்து காரில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்கு வந்தார். அங்கு அவருக்கு பூரணகும்ப மரியாதை அளித்து வரவேற்பு வழங்கப்பட்டது.
இதனை அடுத்து, கோயிலில் உள்ள முக்கிய சன்னிதிகளில் சாமி தரிசனம் மேற்கொண்ட பிரதமர் மோடி, தொடர்ந்து அங்கிருந்து காரில் பூம்புகார் போக்குவரத்துக் கழக படகு நிறுத்துமிடத்திற்குச் சென்றார்.
தொடர்ந்து, அங்கிருந்து விவேகானந்தர் நினைவுப் பாறைக்கு பயணித்தார். அவருடன் மூன்று படகில் பாதுகாப்பு படை அதிகாரிகள் சென்றனர். பின்னர், அங்கும் அவருக்கு சிறப்பு மரியாதை வழங்கப்பட்டது.
தொடர்ந்து, அங்குள்ள விவேகானந்தர் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பிரதமர் மோடி தனது தியானத்தை தொடங்கினார். இந்த தியானம் சுமார் 45 மணி நேரம் நிகழும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து, நாளை மாலை 3 மணி அளவில் அங்கிருந்து படகின் மூலம் திருவள்ளுவர் சிலைக்குச் சென்று, அவரது பாதத்தில் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார் என திட்டமிடப்பட்டுள்ளது.
பின்னர், மீண்டும் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து டெல்லிக்கு விமானம் மூலம் பயணிக்கிறார். இதற்காக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில், விவேகானந்தர் நினைவுப் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலை உள்ளிட்ட சுற்றியுள்ள இடங்களில் சுமார் 4,000க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், விவேகானந்தர் பாறையைச் சுற்றி ரோந்துப் படகுகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
விவேகானந்தர் நினைவுப்பாரையின் சிறப்புகள்: 1892ஆம் ஆண்டு சுவாமி விவேகானந்தர் கன்னியாகுமரியில் உள்ள இதே பாறையில் சுமார் மூன்று நாட்கள் தியானம் மேற்கொண்டு, பின்னர் அங்கிருந்து சிகாகோவில் நடைபெற்ற உலக ஆன்மீக மாநாட்டிற்கு அவர் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை நினைவு கூறும் வகையில் தற்போது பிரதமர் நரேந்திர மோடியும் இந்த மூன்று நாள் தியானத்தில் ஈடுபட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமரின் இந்த வருகையின் போது எந்த பாஜக தலைவர்களும் வரவில்லை. மேலும், இதனை கட்சி நிகழ்வாக மாற்ற வேண்டாம் என பாஜக தலைமை அறிவுறுத்தி இருந்ததாக கூறப்படுகிறது.
இருப்பினும், நேற்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயம் கோயிலுக்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜக பிரமுகர்கள் வரவேற்று வழியனுப்பி வைத்தனர். தொடர்ந்து அவர் திருப்பதிக்குச் சென்றார்.