என்னப்பா நியாயம் ? 47ஆயிரம் ரூபாய் கூட பணத்தை கொண்டு போகக்கூடாதா..?
நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்துவிட்டன. வாக்காளர்களுக்கு வேட்பாளர்கள் பணம் கொடுப்பதை தடுப்பதற்காக பல கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்திருக்கிறது. அதில் முக்கியமாக, ரூ.50,000-க்கு மேலே ரொக்கமாக யாரும் வெளியே கொண்டு செல்லக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது. ஒவ்வொரு முறையும் இந்த உத்தரவுக்கு வியாபாரிகளும், பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறைந்தபட்சம் 1 லட்சம் வரையாவது அதன் உச்சவரம்பை நிர்ணயிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இந்த முறையும் ரூ.50 ஆயிரத்தை மட்டுமே உச்ச வரம்பாக தேர்தல் ஆணையம் நிர்ணயித்து இருக்கிறது.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தனது மனைவியின் மருத்துவ செலவுக்காக ரூ.47 ஆயிரத்தை ஒரு இளைஞர் எடுத்துச் சென்றுள்ளார். அப்போது அவரை சோதனையிட்ட தாசில்தார் மாரிமுத்து தலைமையிலான தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், அவரிடம் இருந்த 47 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். மேலும், பணத்திற்கான ரசீதை காட்டிவிட்டு பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள் எனக் கூறிவிட்டு அவர்கள் ஜீப்பில் செல்ல முயன்றனர்.
அப்போது தனது மாமாவுடன் வந்திருந்த அந்த இளைஞர், தாசில்தாரின் ஜீப்பை வழிமறித்து, "எப்படி எனது பணத்தை நீங்கள் பறிமுதல் செய்துவிட்டு போகலாம்?" எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.தேர்தல் ஆணையமே ரூ.50 ஆயிரம் வரை எடுத்துச் செல்லலாம் எனக் கூறுகிறது. அப்படி இருக்கும் போது, எப்படி நீங்கள் 47 ஆயிரம் ரூபாயை கொண்டு செல்லக் கூடாது என்று கூறலாம்? ஹாஸ்பிடல் செலவுக்காக பணத்தை கொண்டு போறேன் சார். ஹாஸ்பிடலுக்கு பீஸ் கட்டாம, உயிர் போயிருச்சுனா நீங்களா கொடுப்பீங்க?" என வாக்குவாதம் செய்தார்.
இறுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், அவரிடம் பணத்தை ஒப்படைத்துவிட்டு சென்றனர்.