கொடுத்த நிதி என்னாச்சு? ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி..!

கடமான்கோம்பை பகுதியை சேர்ந்த மணி என்பவர் கூலி வேலை செய்து வந்தார். இவர் பில்லூர் அணைப் பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்காக சென்று உள்ளார்.
அப்போது, அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்து உள்ளனர். இதனை அடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது சொந்த ஊரான கடமான்கோம்பைக்கு ஆம்புலன்ஸ் வாகனம் மூலமாக எடுத்துச் செல்லப்பட்டது. செல்லும் வழியில் நீராடியில் இருந்து கடமான்கோம்பை பகுதிக்கு செல்ல முறையான சாலை வசதி இல்லாத காரணத்தால் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சடலத்தை அவரது உறவினர்களிடம் ஒப்படைத்து சென்றனர்.
இதனை தொடர்ந்து அவரது உறவினர்கள் அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே சுமார் 3 கிமீ தொலைவிற்கு டோலி கட்டி கால்நடையாகவே தூக்கிச் சென்று தகனம் செய்து உள்ளனர். இச்சம்பவம் குறித்து அப்பகுதியை சேர்ந்த பழங்குடியின இளைஞர் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவிட்டு அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு உள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவத்துக்கு பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்து உள்ளார். ஆயிரத்துக்கும் அதிகமான பழங்குடியினர் வசிக்கும் இப்பகுதியில் முறையான சாலை வசதி இல்லை என்பது தமிழக அரசின் அவலநிலைக்கு சான்று. மத்திய அரசின் திட்டங்களுக்கு பெயரை மாற்றுவதில் மட்டும் முனைப்புடன் இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
வாஜ்பாய் கொண்டு வந்த பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தை, முதல்வரின் கிராம சாலைகள் திட்டம் என்று பெயர் மாற்றினர். சென்ற ஆண்டு திமுக அரசு வெளியிட்ட அரசாணை படி ஒதுக்கிய 2,300 கோடி நிதி எங்கே சென்றது. யாரை ஏமாற்ற இந்த வெற்று அறிவிப்புகள்? இந்த திட்டத்தின் கீழ் அமைத்த சாலைகள் எத்தனை என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்வாரா? 10 ஆண்டுகளில், மத்திய அரசின் கிராம் சதக் யோஜனா திட்டத்தின் கீழ், மலைக் கிராமங்களில் சாலைகள் அமைக்க மத்திய அரசு பெருமளவில் நிதி ஒதுக்கியிருக்கிறது. ஆனால் தமிழக மலைக் கிராமங்களில் இன்னும் சாலைகள் இல்லை. மக்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகிறார்கள். இத்தனை ஆண்டுகளாக மத்திய அரசு ஒதுக்கிய நிதி எங்கே சென்றது? இனியும் தாமதிக்காமல் உடனடியாக சாலைகள் அமைக்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.