1. Home
  2. தமிழ்நாடு

இன்று சவுக்கு சங்கருக்கு ஏற்பட்ட கதி... நாளை யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம்..!

1

திமுக அரசின் இந்த பழிவாங்கும் செயலை நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம்” என்று அர்ஜுன் சம்பத் கூறினார்.

பெண் போலீஸாரையும், காவல்துறை உயரதிகாரி ஒருவரையும் மோசமாக சித்தரித்து ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலில் சவுக்கு சங்கர் அண்மையில் பேட்டி அளித்தார். இந்தப் பேட்டி மிக பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், கோவை சைபர் க்ரைம் சப் இன்ஸ்பெக்டர் சுகன்யா புகார் அளித்தார். இதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து, சவுக்கு சங்கரை கைது செய்தனர். அதன் பின்னர், அவரை கொண்டு வரும் வழியில் விபத்து, கஞ்சா வழக்கு, சிறையில் சவுக்கு சங்கர் கை உடைந்தது என ஏராளமான விஷயங்கள் அரங்கேறின. இதன் தொடர்ச்சியாக, சில தினங்களுக்கு முன்பு சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தின் கீழும் போலீஸார் கைது செய்தனர்.

இது ஒருபுறம் இருக்க, திமுக அரசையும், முதல்வர் ஸ்டாலினையும் சவுக்கு சங்கர் கடுமையாக விமர்சித்து வந்ததை மனதில் வைத்தே, தற்போது அவர் பழிவாங்கப்படுகிறார் என்று அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில், சவுக்கு சங்கர் விவகாரம் குறித்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்திடம் நிருபர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

சவுக்கு சங்கர் முன்வைக்கும் கருத்துகள், அவர் கூறும் விமர்சனங்களில் எங்களுக்கு மாறுபட்ட கருத்துகள் இருக்கின்றன. ஆனால், அவரை கஞ்சா வழக்கில் கைது செய்ததையும், சிறையில் அவர் கை உடைக்கப்பட்டதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. அந்தக் காலத்தில், எடப்பாடி ஆட்சிக் காலத்திலும் நிறைய பேர் காவல் நிலைய பாத்ரூமில் வழுக்கி விழுவார்கள். ஆனால் அப்படி வழுக்கி விழுபவர்கள் ரவுடிகளாகவும், சாராயம் விற்பவர்களாகவும் தான் இருப்பார்கள்.

ஆனால் இப்போது என்ன நடக்கிறது? திமுக அரசுக்கு எதிரான கருத்தை தெரிவித்து விட்டார் என்பதற்காக, ஒருத்தர் மீது பல வழக்குகளை போடுவதும், சிறைச்சாலையிலேயே அவர் கையை உடைப்பதையும் மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். நாங்களும் பார்த்துக் கொண்டே இருக்கிறோம். இந்த காலமும் மாறும். ஆட்சி மாறும் போது இதற்கெல்லாம் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

இன்று சவுக்கு சங்கருக்கு ஏற்பட்ட கதி, நாளை யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். ஆட்சி அதிகாரத்தை வைத்துக் கொண்டு, தங்களுக்கு பிடிக்காதவர்கள் மீதும், தங்களை விமர்சிப்பவர்கள் மீது ‘அரச பயங்கரவாதத்தை’ ஏவிவிடுவது நல்லதல்ல. நாங்களும் இதை நீண்டகாலம் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அர்ஜுன் சம்பத் கூறினார்.

Trending News

Latest News

You May Like