நாளை நீட் தேர்வு… விதிமுறைகள் என்னென்ன?
மருத்துவ படிப்புக்கான 'நீட்' நுழைவு தேர்வு நாளை (13.09.20) நாடு முழுதும் நடைபெற உள்ளது. இதற்காக மாணவர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
மே நடக்க வேண்டிய நீட் தேர்வு கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் நாளை நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற உள்ளது. நாடு முழுதும், 16 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில், 1.17 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்தனர். அவர்களில், தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, 14 நகரங்களில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வில், மாணவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், கடந்த வாரம் வெளியிடப்பட்டன. அதன்படி, தேர்வு மையத்துக்கு வரும் அனைத்து மாணவர்களுக்கும், உடல் வெப்பநிலை, தானியங்கி லேசர் கருவி வாயிலாக சோதிக்கப்படும். இயல்பான சராசரி வெப்பநிலையை விட அதிகம் உள்ள மாணவர்கள், தனி அறையில் தேர்வு எழுத வைக்கப்படுவர்.
அனைவரும் கிருமி நாசினியை பயன்படுத்தி, கைகளை சுத்தம் செய்த பிறகே, தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். தேர்வு மையத்துக்குள் கூட்டமாக நிற்கக் கூடாது. முக கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். மின்னணு பொருட்கள் எதையும் எடுத்து வரக்கூடாது. விண்ணப்பத்தில் பதிவேற்றியதை போன்ற புகைப்படத்தை, ஹால் டிக்கெட்டில் ஒட்டுவதற்கு கொண்டு வர வேண்டும் என, பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
மாணவர்கள் முகக் கவசம் அணிவதன் வழியே விதிமீறல்களில் ஈடுபட்டு விடக்கூடாது என்பதால், அவர்களுக்கு தேர்வு மையங்களில் புதிய முக கவசம் வழங்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
newstm.in