மேற்கு வங்க ரயில் விபத்து.. ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு..!
மேற்கு வங்க மாநிலத்தில் கொல்கத்தா நோக்கி சென்று கொண்டிருந்த கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில், இன்று அதிகாலை சிக்னலுக்காக தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அதற்கு பின்னால் வந்த சரக்கு ரயில் ஒன்று, கஞ்சன்ஜங்கா ரயில் மீது பயங்கர வேகத்தில் மோதியது. இதில் பயணிகள் ரயிலின் கடைசி பெட்டி தூக்கி வீசப்பட்டது.
இந்த கோர விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, தண்டவாளத்தில் இரு ரயில்களும் மோதிக் கொள்வதை தடுக்கும் கவாச் என்ற அமைப்பில் ஏற்பட்ட கோளாறே இந்த விபத்துக்கு காரணம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மேலும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.2.5 லட்சம் வழங்கப்படும் என்றும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.